Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஹரி திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
திருத்தணி தொகுதியைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் செவ்வாய்க்கிழமைகளில் காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் தலா இரண்டு மணி நேரம் சாமி தரிசனம் செய்து வந்ததாகவும், கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இந்த நடைமுறை நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார்.
எனவே, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் :
திருத்தணி கோயிலில் உள்ளூர் மக்களை முன்னுரிமை அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளதாக தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களிலும் உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கைகள் வந்துள்ளன. அதே நேரத்தில், கோயில்களில் வரிசை மேலாண்மையை மேற்கொள்வதில் பல்வேறு சட்டச் சிக்கல்கள் உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
கோயிலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை மட்டுமே அனுமதிக்கும் வசதி இருக்கும் நிலையில், அதைவிட அதிகமானோர் வந்தால் தரிசன நேரம் அதிகரிப்பதுடன், வரிசை மேலாண்மையிலும் சிக்கல்கள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.
திருத்தணி கோயிலில் உள்ளூர் மக்களை தரிசனத்திற்கு அனுமதிப்பது தொடர்பாக அறங்காவலர் குழுவின் பரிந்துரைக்காக காத்திருப்பதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறினார்.
மேலும், விரைவில் இணையதளம் மற்றும் செயலி மூலம் தரிசன டிக்கெட்டுகளைப் பெறும் வசதியை ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், அதில் உள்ளூர் மக்களுக்கு எந்த வகையில் சிறப்பு வசதி ஏற்படுத்தித் தரலாம் என்பது குறித்தும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved