Also Watch
Read this
By: Manigandan Raja

வளைகுடா நாடுகள் முழுவதும் மின்தடையை ஏற்படுத்துவோம்
ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கினால், வளைகுடா நாடுகள் முழுவதும் மின்தடையை ஏற்படுத்தும் வகையில் பதிலடி கொடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்துவது குறித்து எச்சரித்த நிலையில், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார் ஆகிய நாடுகளின் வேண்டுகோளுக்குப் பிறகு அந்த முடிவை தற்காலிகமாக ஒத்திவைத்ததாக கூறப்படுகிறது.
ஈரான் தனது மின் நிலையங்கள் தாக்கப்பட்டால், வளைகுடா நாடுகளின் அதே வகை முக்கிய உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்கும் என மத்தியஸ்தர்கள் மூலம் எச்சரிக்கை அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் - ஓமன் கப்பல் போக்குவரத்து ஒப்பந்தம் புதிய கட்டுப்பாடுகள்
ஈரான் மற்றும் ஓமன் நாடுகள் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் செல்லும் விவகாரத்தில் புதிய ஒப்பந்த கட்டமைப்பை உருவாக்கியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள், மேலும் ஈரானுக்கு சேதம் ஏற்படுத்தியதாக கருதப்படும் நாடுகளின் கப்பல்களுக்கு அனுமதி மறுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விதிகளை மீறும் கப்பல்களுக்கு அவற்றின் சரக்கு மதிப்பில் 20 சதவீத அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடா கடல் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை ஈரான் அரசு, ராணுவத்துடன் இணைந்து கண்காணிக்கும் என கூறியுள்ளது.
சிரியாவில் மினி பேருந்தில் குண்டுவெடிப்பு
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே உள்ள ஜரமானா நகரில் மினிபஸ்சில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 2 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். ட்ரூஸ் மற்றும் கிறிஸ்தவ மக்கள் வசிக்கும் பகுதியில் நடந்த இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

சிரியாவில் முன்னாள் அதிபர் பஷார் அல்-அசாத் ஆட்சி கவிழ்ந்த பின்னர் இதுபோன்ற பயங்கரவாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved