Also Watch
Read this
By: Manigandan Raja

நிலவின் தென் துருவப் பகுதியில் ஆராய்ச்சி மையம்
நிலவின் தென் துருவப் பகுதியில், மனிதர்கள் நிரந்தரமாக தங்கி ஆய்வு செய்யும் வகையில் ஆராய்ச்சி மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ள நாசா, இதில் ISRO-வும் இணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா அமெரிக்க விண்வெளி ஒத்துழைப்பு பேச்சுவார்த்தையில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டது. நாசாவின் இந்த மெகா திட்டத்துக்காக 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ரோவர்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட உபகரணங்களுடன் இந்த ஆராய்ச்சி நிலையம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல்
செங்கடலில் ஹௌதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதலில் 3 பாகிஸ்தானியர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். ஹோர்முஸ் நீரிணை முடக்கப்பட்டதால், சௌதி அரேபியா தனது கச்சா எண்ணெய்யை கொண்டு செல்ல மாற்று வழியாக செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் நீரிணை பகுதிகளை பயன்படுத்தி வருகிறது.

இந்த சூழலில், பாப் அல் மண்டேப் நீரிணை பகுதியில் சென்று கொண்டிருந்த சௌதி அரேபிய வணிகக் கப்பல் மீது ஹௌதி கிளர்ச்சியாளர்கள் பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில், பாகிஸ்தான் மாலுமிகள் 3 பேரும், இந்தோனிசிய மாலுமி ஒருவரும் உயிரிழந்தனர்.
அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பல்
வியட்நாம் மிகப்பெரிய மற்றும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க்கப்பலின் கட்டுமானப் பணிகளைத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென் சீனக் கடல் பகுதியில் உரிமை கோரும் சீனா மற்றும் பிற நாடுகளுடன் நீண்டகாலமாக கடல்சார் எல்லைப் பிரச்சனைகளை சந்தித்து வரும் வியட்நாம், பெரும்பாலும் ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ராணுவத் தளவாடங்கள் மீதான சார்ந்திருத்தலைக் குறைத்துக்கொண்டு, உள்நாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியை விரிவுபடுத்த முயற்சித்து வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved