Also Watch
Read this
நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், பாஜக எம்எல்ஏ வெளிநடப்பு செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில்...
தமிழ்நாடு சட்டசபையில், இன்று ஆகஸ்ட் 11ஆம் தேதி, நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து சுகாதார துறை அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது;
நீட் தேர்வு என்பது அரசியலமைப்பு சட்டம் வழங்கும் சமத்துவக் கோட்பாடு, சமூக நீதி மற்றும் மாநிலங்களின் தன்னாட்சி உரிமைகளுக்கு முற்றிலும் எதிராக உள்ளது. இது நாடு தழுவிய அளவில் மாணவர்களுக்கான சம வாய்ப்பைப் பறிக்கிறது.

நீட் தேர்வு முட்டுக்கட்டை
நீட் தேர்வு முறை சாதாரண மாணவர்களுக்கு பயனளிப்பதற்கு பதிலாக, லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பயிற்சி மையங்கள் பெருகுவதற்கே வழி வகுத்துள்ளது. மாநிலப் பாடத்திட்டத்திலும், தமிழ் வழியிலும் பயிலும் கிராமப்புறத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவக் கல்வியைப் பெறுவதற்கு நீட் தேர்வு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. எனவே, மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு முறையை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும், மாநில கல்வி உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.

தொடரும் முறைகேடுகள்
தேசிய அளவில், நீட் தேர்வு முறையை முழுமையாக கைவிட மத்திய அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை, முந்தைய நடைமுறையைப் போல 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்த வேண்டும். தொடர்ந்து நடைபெறும் வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடு ஆகியவை மாணவர்களிடையே கடுமையான மன உளைச்சலையும், தேர்வு முறையின் மீதான நம்பிக்கையின்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

ரத்து செய்ய வேண்டும்
2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளிக்கப்படாமல் உள்ளது. சட்டங்களில் தேவையான திருத்தங்கள் செய்து நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். பள்ளிக் கல்வியைப் புறந்தள்ளிவிட்டு ஒரு நுழைவுத் தேர்வு மாணவர்களின் உயர்கல்வியைத் தீர்மானிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முறைகேடுகள் நடக்கும் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்
இவ்வாறு அமைச்சர் அருண்ராஜ் தனி தீர்மானத்தை கொண்டு வந்தார்.

பாஜக எம்எல்ஏ வெளிநடப்பு
தமிழ்நாடு சட்டசபையில் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வு ரத்து தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாஜகவின் ஒரே எம்.எல்.ஏ.வான போஜராஜன் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார். ’மருத்துவக் கல்வியின் தரத்தை உயர்த்தவும், தகுதியான மருத்துவர்களை உருவாக்கவும் மாணவர்களின் எதிர்காலத்திற்கு நீட் தேர்வு அவசியமானது,’ என்று பாஜக எம்எல்ஏ போஜராஜன் கூறினார். மேலும், சட்டசபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து "வெளிநடப்பு செய்கிறேன்" என்று கூறிவிட்டு பாஜக எம்.எல்.ஏ போஜராஜன், வெளியேறினார்.

நீட் ரத்து தீர்மானம் நிறைவேற்றம்
நீட் தேர்வு ரத்துக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது. பாஜக எம்எல்ஏவை தவிர்த்து அனைத்து கட்சிகளும் தமிழக அரசு கொண்டு வந்த நீட் ரத்து தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved