Also Watch
Read this
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் அனைத்து சான்றிதழ்களையும் டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை என அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்து உள்ளார்.
இடைத்தரகர்கள் எவரையும் அணுகாமல் பயனாளர்களே நேரடியாக சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

பாடத்திட்ட வடிவமைப்பு குழுக் கூட்டம்
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கூட்டரங்கில், பாடத்திட்ட உயர்மட்ட வல்லுநர் குழு மற்றும் வடிவமைப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தலைமையில், அறிவியலாளர் மயில்சாமி அண்ணாதுரை உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது, அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது;
இந்த நொடி முதல் தமிழகத்தின் கல்வி மாறுகிறது, கற்றலை இனிமையான அனுபவமாக மாற்றுவோம். அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை மையப்படுத்திய கல்வியாக மாறப்போகிறது. அனைவருக்குமான, ஆரோக்கியமான கல்வியாக இருக்கப் போகிறது. அதோடு, பெற்றோரை மதிக்கும் கல்வித்திட்டமாக இருக்கும்.

ஏஐ தொழில்நுட்பம்
கதைகளின் வடிவில் மாணவர்களுக்கு கணிதம் கற்றுத்தரப்படும். இனிமேல், புத்தகப் பை சுமை குறைக்கப்படும். மாணவர்களின் மனச்சுமை குறையும், பாடப்புத்தகங்கள் வண்ணப்பட புத்தகங்களாக மாறும். எழுத்துக்கள் குறைந்து, வண்ணப்படங்கள் அதிகமாக்கப்படும்.

அந்த வண்ணப்படங்கள் , குழந்தைகளுடன் பேசும். அதில் ஒரு கியூஆர் கோடு இருக்கும், அதை ஸ்கேன் செய்து பார்த்தால், அது காணொலியாக மாறும். ஏஐ தொழில்நுட்பத்தின் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும். ஏஐ பற்றி யாரும் அச்சப்பட வேண்டாம். ஒருபோதும் நமது வேலையை ஏஐ பறிக்காது. தகுதி, திறமையை வைத்து மட்டும் தான் ஆசிரியர்கள் உள்ளே வர முடியும். கல்வித்துறையில் ஊழலை ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.