Also Watch
Read this
By: Manigandan Raja

நடிகர் விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்க இருந்த புதிய திரைப்படம் கைவிடப்பட்டுள்ளதாக நடிகர் விஷ்ணு விஷால் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக இப்படம் தொடர்பாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், பட்ஜெட் விவகாரத்தில் சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில், விஷ்ணு விஷால் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இந்த தகவலை உறுதி செய்துள்ளார்.
அந்த அறிக்கையில், “இந்தப் படத்தை கடந்த ஒரு வருடமாக மிகவும் எதிர்பார்த்திருந்தேன். கடந்த 10 மாதங்களாக படத்திற்காக தீவிரமாக தயாராகி வந்தேன். ‘கட்டா குஸ்தி 2’ வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என்பதே எனது திட்டமாக இருந்தது. ஆனால், சமீபத்தில் இயக்குநருடனான கிரியேட்டிவ் கருத்து வேறுபாடு மற்றும் பட்ஜெட் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டன. இப்படத்தை சாத்தியமாக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன். இருந்தாலும், எவ்வளவு முயற்சி செய்தும் படத்தை இனி தொடர வேண்டாம் என இருவரும் இணைந்து முடிவு செய்துள்ளோம்.

இந்த முடிவு எனக்கும் அருண்ராஜா காமராஜுக்கும் எளிதானதாக இல்லை. இருப்பினும், இப்படத்தில் இருந்து இருவரும் விலக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவரது எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய எனது வாழ்த்துகள்.இது தொடர்பான சட்ட நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் உரிய காலத்தில் முடிவுக்கு வரும்.
தற்போது எனது கவனம் அடுத்ததாக வெளியாகவுள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படம் மற்றும் எனது சகோதரர் இயக்கியுள்ள ‘Yellow Yellow Dirty Fellow’ திரைப்படத்தின் மீதே உள்ளது. தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் அன்புக்கும் ஆதரவுக்கும் மனமார்ந்த நன்றி” என தெரிவித்துள்ளார்.
நடிகை தபுவின் ஆளுமை உரிமைக்கு பாதுகாப்பு
நடிகை தபுவின் பெயர், புகைப்படம், உருவம், குரல் உள்ளிட்ட ஆளுமை உரிமைகளை அவரது அனுமதியின்றி பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் பிரபலங்களின் உருவம் மற்றும் குரலைப் பயன்படுத்தி போலி வீடியோக்கள், புகைப்படங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் உள்ளடக்கங்கள் உருவாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இதனால் தங்களின் தனிப்பட்ட அடையாளம் மற்றும் நற்பெயர் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க பல திரை பிரபலங்கள் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.

அந்த வகையில், தபுவும் தனது பெயர், புகைப்படம், உருவம், குரல் மற்றும் நற்பெயரை அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்துவதைத் தடுக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் தன்னைப் பற்றிய ஆட்சேபனைக்குரிய டிஜிட்டல் உள்ளடக்கங்களை உடனடியாக அகற்ற உத்தரவிட வேண்டும் என்றும் அவர் மனுவில் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தபுவின் ஆளுமை உரிமைகளை மீறும் வகையில் உள்ளதாகக் கூறப்படும் 150-க்கும் மேற்பட்ட இணைய முகவரிகளில் இடம்பெற்றுள்ள உள்ளடக்கங்களை அகற்ற கூகுள், மெட்டா, எக்ஸ் மற்றும் ரெட்டிட் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved