Also Watch
Read this

நாட்டின் 80ஆவது சுதந்திர நாளையொட்டி குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு காணொலி வாயிலாக வாழ்த்து தெரிவித்து உரையாற்றியுள்ளார். சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்திவைத்த முடிவு தீர்க்கமானது என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது சுதந்திர தின உரையில் பாராட்டு தெரிவித்தார், பயங்கரவாதத்திற்கு புகலிடம் தரும் நாடு கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
இந்தியாவின் 80ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 14ஆம் தேதி, நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;
நம் நாட்டின் சுதந்திர தினத்தை முன்னிட்டு உங்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் நாடு 80ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட உள்ளது. நாட்டு மக்களும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் அனைவரும், இந்த தேசிய விழாவை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகின்றனர். நமது மூவண்ண தேசியக் கொடி, நம் நாட்டின் விடுதலையின் சின்னமாக விளங்குகிறது. அளப்பரிய பெருமிதத்துடன் நாம் அதை ஏற்றுகிறோம்.

ஜனநாயகத்தின் பண்பு
நமது நாட்டின் நீதித்துறை அமைப்பில் போதிய நிதி ஆதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் எந்தவொரு ஏழை மனிதனுக்கும் நீதி மறுக்கப்படக் கூடாது என்பதில் நீதித்துறையினர் உறுதியோடு செயல்பட வேண்டும். இதுவே நமது ஜனநாயகத்தின் முதன்மைப் பண்பாகும். ஆபரேஷன் சிந்தூர் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் பயங்கரவாத வலைப் பின்னல்களுக்கு எதிராக இந்திய ஆயுதப்படை நடத்திய ’ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதல், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை மிகத் துல்லியமாக அழிக்கும் இந்தியாவின் திறனை உலகிற்குத் தெளிவாக நிரூபித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு புகலிடம் அளித்து ஆதரவு தரும் நாட்டுடன் மேற்கொள்ளப்பட்ட சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்த நடவடிக்கையானது, தேசிய நலன் கருதியும், குறிப்பாக நாட்டின் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கோடும் எடுக்கப்பட்ட மிகச் சரியான மற்றும் தீர்க்கமான முடிவாகும்.

வறுமை ஒழிப்பு...
கடந்த பத்து ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அனைவரையும் உள்ளடக்கிய சிறப்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் சமூக நலத்திட்டங்களின் மூலமாக இந்தியாவில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையிலிருந்து வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளனர். நாட்டின் 80 கோடிக்கும் அதிகமான ஏழை எளிய பயனாளிகளின் உணவுப் பாதுகாப்பைத் தொடர்ந்து உறுதி செய்யும் வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் இலவச ரேஷன் தானிய திட்டம் மிகப்பெரிய சாதனையாக உருவெடுத்துள்ளது. இத்தகைய நலத்திட்டங்கள் மூலம் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் கணிசமான அளவில் உயர்ந்துள்ளது.

தேசிய சாதனை
உலகளாவிய போர், பொருளாதார நிலையின்மை மற்றும் பல தடைகளுக்கு இடையிலும் இந்தியாவின் பொருளாதாரம் உலக சராசரி வளர்ச்சியை விட இரண்டு மடங்கு வேகத்தில் மிகச் சிறப்பாக வளர்ச்சி அடையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் நடைபெறும் நிகழ்நேர டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பாதியிலும் அதிகமான பங்களிப்பை இந்தியா மட்டுமே வழங்கி சாதனை படைத்துள்ளது. மேலும், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் சவாலாக இருந்த நக்ஸலைட் அமைப்புகளை முழுமையாகக் கட்டுப்படுத்தி, நக்ஸல் அற்ற இந்தியாவை உருவாக்கியதும், பாஸ்தர் போன்ற பகுதிகளில் ஏற்பட்டுள்ள விரைவான முன்னேற்றமும் மிகப்பெரிய தேசிய சாதனையாகும்.
பொதுத் தேர்வுகளில் முறையற்ற நடைமுறைகளை முற்றிலுமாகத் தடுத்து, தேர்வுகளை இளைஞர்களுக்கு மிகவும் வெளிப்படையானதாகவும், பாதுகாப்பானதாகவும், நம்பகத்தன்மை வாய்ந்ததாகவும் மாற்றுவதே இந்தச் சீர்த்திருத்தங்களின் நோக்கம்.
இவ்வாறு குடியரசுத்தலைவர் முர்மு உரையாற்றினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved