Also Watch
Read this
By: Fyrose Banu

புதுக்கோட்டை மாவட்ட உர விற்பனையாளர்கள் உரங்கள் இருப்பு மற்றும் விலை விவர பலகையை தினந்தோறும் பராமரிக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்பொழுது சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல் பயிர், மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து, கரும்பு, தென்னை, காய்கறிகள், வாழை மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்களான யூரியா 5520 மெட்ரிக் டன்கள், டிஏபி 1346 மெட்ரிக் டன்கள், பொட்டாஸ் 1080 மெட்ரிக் டன்கள், காம்ப்ளக்ஸ் 4377 மெட்ரிக் டன்கள் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 904 மெட்ரிக் டன்கள் ஆகியன தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் ஆகியவற்றிற்கு இருப்பு வைக்கப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மானிய உரங்களை பிற மாவட்டங்களுக்கு அனுப்புவதோ பிற மாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யவோ கூடாது, விவசாயம் அல்லாத பிற பயன்பாட்டிற்கு மானிய உரங்களை வழங்க கூடாது, உர மூட்டையின் மேல் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விளக்கு மேல் உரங்களை விற்பனை செய்யக்கூடாது.

விவசாயிகளுக்கு தரமான உரங்கள் விநியோகம் செய்யப்படுகிறதா என உர ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு மேற்கொள்ளும் பொழுது உரங்களை அதிக விலைக்கு விற்பனை செய்தால் விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தால் உரம் கடத்தல் பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மீறினால் உர உரிமை ரத்து செய்யப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் அருணா எச்சரித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved