Also Watch
Read this
பெரு வெள்ளத்தில் சிக்கி உள்ள உறவுகளை தேடி, தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நேபாளம் சென்றுள்ள உறவினர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒரு வாட்ஸ்ஆப் குழு அமைத்து தேடும் பணியில் இறங்கி உள்ளனர்.

விமான நிலையங்களில் சந்தித்துக் கொண்ட உறவினர்கள், யாரைப்பற்றி எந்த தகவல் கிடைத்தாலும் உடனுக்குடன் தெரியப்படுத்தவும் என்பதை முன்வைத்து தேடும்பணியில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் மதியழகன் தரப்பில் இருந்து தகவல் கிடைக்க பெற்று உள்ளது.

இரண்டு குழுக்கள் சந்தித்தபோது...
இயற்கையை மிஞ்சி எதுவும் இல்லை என்பதை கண்முன் காட்டிவிட்டது நேபாள பெருவெள்ளம். சிலர் பாதுகாப்பான இடங்களில் இருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டாலும் வெள்ளத்தோடு வெள்ளமாக அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தவர்களின் நிலையை வெறும் வார்த்தையால் சொல்லி எல்லாம் வேதனையை தீர்த்துக் கொள்ள முடியாது.

தங்கள் உறவினர்களை தேடி சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு சென்ற ஒரு குழுவும், டெல்லி விமான நிலையத்தில் இருந்து காத்மண்டு செல்ல காத்திருந்த ஒரு குழுவும் எதார்த்தமாக சந்தித்துக் கொண்டனர்.

வாட்ஸ் அப் குழு
தங்கள் உறவுகளை தேடித்தான் நேபாளம் செல்கிறோம் என இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ள இரண்டு குழுவில் உள்ளவர்களும் பேசிக்கொண்டதோடு, யார் எங்கு சென்றாலும், யாரை பற்றி என்ன தகவல் கிடைத்தாலும், உடனுக்குடன் தகவலை தெரிவித்துக் கொள்ளலாம், போட்டோக்களை பரிமாறி கொள்ளலாம், அதன் மூலம் அடையாளம் காணப்படும் நபர்கள் யாருக்கு உறவினர்கள் என்பதை அறிய முடியும் எனக்கூறி வாட்ஸ் அப் குழுவை ஆரம்பித்துள்ளனர்.

தேடும் பணியில் உறவினர்கள்...
என்னதான் மீட்பு படையினர் சடலங்களை மீட்டாலும், உடல் பாகங்களை மீட்டாலும் அவர்களால் எளிதில் அடையாளம் காண முடியாது என்பதால் வாட்ஸ்அப் குழு பேருதவியாக இருக்கும் என வெள்ளத்தில் சிக்கியவர்களை தேடி சென்றுள்ள உறவினர்களும் தேடும்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அவர்களின் நம்பிக்கை பொய்த்துப்போகாமல் வெள்ளத்தில் சிக்கியவர்கள் விரைவில் கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது எண்ணமும்கூட.
நியூஸ் தமிழ் செய்திகளுக்காக காத்மண்டுவில் இருந்து ஒளிப்பதிவாளர் சந்தோஷ் குமாருடன் செய்தியாளர் மதியழகன்...
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved