Also Watch
Read this
கேரள மாநிலம் மூணாறு அருகே கன்னிமலை பகுதியில், தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவரை காட்டு யானைகள் துரத்தியதன் வீடியோ வெளியாகியுள்ளது. நல்வாய்ப்பாக அந்த தொழிலாளி நூலிழையில் உயிர் தப்பினார்.

காட்டு யானைகளின் அட்டகாசம்
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள கன்னிமலை பகுதியில் கடந்த சில நாட்களாக, காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவதால், பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். இந்நிலையில், இன்று 4ஆம்தேதி, காலை 8.30 மணியளவில் கன்னிமலை பகுதியில் வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதிக்கு வந்த காட்டு யானைகள் கூட்டம், அங்கு வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை திடீரென துரத்தியதாக கூறப்படுகிறது.


நூலிழையில்...
காட்டு யானைகள் தன்னை நோக்கி வருவதை பார்த்த தொழிலாளி அச்சமடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். சிறிது தூரம் யானைகள் துரத்திய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக யானைகளிடம் சிக்காமல் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கன்னிமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாகவே காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகின்றன. பகல் நேரங்களிலும், இரவு நேரங்களிலும் யானைகள் குடியிருப்பு பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகே வருவதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து பலமுறை சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினர்.

நடவடிக்கை தேவை
தொழிலாளர்கள் தினமும் அச்சத்துடனேயே பணிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இன்று காலை தொழிலாளி ஒருவர் காட்டு யானைகளிடம் சிக்காமல் நல்வாய்ப்பாக உயிர்
தப்பியுள்ளார். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், எதிர்காலத்தில் உயிரிழப்பு அல்லது படுகாயம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கன்னிமலை பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவற்றை பாதுகாப்பாக வனப்பகுதிக்குள் விரட்டவும் வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வீடியோ வைரல்
மேலும், யானைகள் நடமாடும் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், பொதுமக்களை ஒன்றுதிரட்டி போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் காட்டு யானைகள் கூட்டம் தொழிலாளியை துரத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved