Also Watch
Read this
நேபாளத்தில், பேரழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் ஓய்ந்து 216 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு தொழிலாளர்கள், பேசுபொருளாகி உள்ளனர். நேபாளத்தின் திரிசூலி நீர்மின் நிலையத்தில் இருந்து இவர்கள் மீட்கப்பட்டனர்.

பெருவெள்ளம், பெரும்சேதம்
நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதி அன்று இமயமலை பனிப்பாறை சரிவு காரணமாக ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த இயற்கைப் பேரிடரில் நீர்மின் நிலையச் சுரங்கங்களுக்குள் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.

216 மணி நேரம்...
பேரழிவிற்குப் பிறகு, சுமார் 216 மணி நேரம் உணவோ, குடிநீரோ இன்றி பூமிக்கு அடியில் இருந்த சுரங்கத்தில் சிக்கியிருந்த 2 தொழிலாளர்கள் இன்று செப்டம்பர் 4ஆம் தேதி உயிருடன் மீட்கப்பட்டனர். சமூக வலை தளங்களில் "பூமிக்குள் இருந்து வந்த 2 இதயங்கள்" என்று நெகிழ்ச்சியோடு இவர்கள் பேசு பொருளாகி உள்ளனர்.

யார் இவர்கள்?
திரிசூலி-3A நீர்மின் நிலையச் சுரங்கத்தில் Trishuli-3A Hydropower Tunnel சிக்கியிருந்த
சஞ்சய் ஷா - இயந்திரப் பிரிவு ஃபோர்மேன்
கபீர் மகர்ஜன் - இயந்திரப் பிரிவு மேற்பார்வையாளர்
ஆகிய இருவர் தான் இந்த அதிர்ஷ்டசாலிகள் ஆவர்.

எப்படி உயிர் பிழைக்க முடிந்தது?
இந்த சுரங்கத்தின் உட்பகுதியில் ஓரளவுக்கு காற்றோட்ட வசதி இருந்ததால், கடுமையான சூழ்நிலையிலும் அவர்களால் மூச்சுவிட முடிந்தது. மீட்கப்பட்ட இருவரில் கபீர் மகர்ஜனுக்குக் கை, கால்களை அசைக்க முடியாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சஞ்சய் ஷா லேசான காயங்களுடன் தப்பி உள்ளார். இருவருக்குமே உடனடியாக முதலுதவி அளிக்கப்பட்டு, ஹெலிகாப்டர் மூலம் காத்மாண்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

புதிய நம்பிக்கை
இவர்கள் உயிருடன் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, அதே சுரங்கத்தின் உள்ளே இருந்து மேலும் சில குரல்கள் கேட்பதாக மீட்புக் குழுவினர் கூறி உள்ளனர். இதனால் சுரங்கத்தில் சிக்கியிருக்கும் பிற தொழிலாளர்களையும் உயிருடன் மீட்க முடியும் என்ற புதிய நம்பிக்கை மீட்புக் குழுவினருக்கு கிடைத்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved