Also Watch
Read this
By: Web Team

இந்திய நாடாளுமன்ற மக்களவை தலைவர், அதாவது சபாநாயகர் மீது இதுவரை மூன்று முறை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஆனால் மாநிலங்களவை தலைவர், அதாவது மாநிலங்களவையை நடத்தும் குடியரசு துணைத் தலைவர் மீது ஒரு முறைகூட நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்ததே இல்லை. ஆனால் இந்த ரெக்கார்டை முறியடித்தவர் ஜெகதீப் தன்கர்.
கடந்த ஆண்டு ஜெகதீப் தன்கர் மீது நம்பிக்கையில்லா நோட்டீஸை இந்தியா கூட்டணி வழங்கியது. ஆனாலும் அவரது பதவிக்கு ஆபத்தில்லை, நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற தேவையான வாக்குகளும் அந்தக் கூட்டணியிடம் இல்லை.
ஆனாலும் மாநிலங்களவை சபாநாயகர் எதிர்கட்சிகளை எதிரிகளைப் போல நடத்துவதற்கு உச்சபட்ச எதிர்ப்பை காட்டவே அந்த நோட்டீஸ் என்று சொன்னது இந்தியா கூட்டணி. மாநிலங்களவை உருவாக்கப்பட்ட 72 வருடங்களில் ஒரு முறை கூட அதன் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்கட்சிகள் கொண்டு வந்ததே இல்லை.
காரணம், மாநிலங்களவை என்பது ஆளும்கட்சி மற்றும் எதிர்கட்சிகள் வேற்றுமையிலும் ஒன்றுபட்டு பல கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடம். நேர் எதிர் துருவங்கள் ஏதோ ஒரு வகையில் கைகுலுக்கும் இடமாகவே அது பார்க்கப்பட்டு வந்தது.
ஆனால் மாநிலங்களவை மீதான அப்படி ஒரு இமேஜை உடைத்தவர் ஜெகதீப் தன்கர். உச்சநீதிமன்றத்துக்கு எதிராக தன்கர் தெரிவித்த கருத்துகளும் பெரிய சர்ச்சைகளை உண்டாக்கியது. நீதிமன்றங்கள் குடியரசு தலைவருக்கு உத்தரவு போட முடியாது.
142 என்ற சட்டப் பிரிவு நீதித்துறையில் ஒரு அணு ஏவுகணையைப் போல் எப்போதும் உள்ளது. அது ஜனநாயகத்துக்கு எதிரானதாகும் என கருத்து சொன்னது நீதித்துறையிலும் எதிர்கட்சிகள் வட்டாரத்திலும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
தன்கரின் பொதுவாழ்க்கையே பல அதிரடி திருப்பங்களை கொண்டதுதான். 1989ம் ஆண்டு ஜனதா தளத்தில் இணைந்து தனது அரசியலை துவக்கினார் தன்கர். அப்போது பாஜக ஆதரவுடன் முதன்முறையாக போட்டியிட்ட தன்கர் எம்.பி.யானர்.
சந்திரசேகர் அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக பதவியேற்றார். அரசியலில் காலடி வைத்த வருடத்திலேயே மத்திய அமைச்சராகும் வாய்ப்பு தன்கருக்கு அமைந்தது. ஆனால் அந்தக் கட்சியில் தன்கரால் தாக்குப்பிடிக்கமுடியவில்லை.
1991ம் வருடம் காங்கிரசில் இணைந்தார். போட்டியிட்ட தேர்தல்களில் தோல்வியை தழுவினார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2008ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார் தன்கர். இங்கும் இருக்கும் இடம் தெரியாமல்தான் இருந்தார்.
ஆனால் 2019ல் மேற்கு வங்க ஆளுநராக்கப்பட்டார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் ஆட்சி நடத்தும் ஃபார்முலா தன்காரால்தான் கண்டுபிடிக்கப்பட்டது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழும் அளவுக்கு முதல்வர் மம்தா பானர்ஜிக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்தார்.
எதற்கும் அஞ்சாத மம்தா, தன்கரின் நடவடிக்கைகளால் வெறுப்பின் உச்சத்துக்கு சென்று அளவுக்கு அதிகமான தடித்த வார்த்தைகளை பிரயோகித்தார்.
இந்நிலையில்தான் 2022ம் ஆண்டு பாஜகவின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தன்னை எதிர்த்த மார்க்ரெட் ஆல்வாவை தோற்கடித்தார். தன்கர் பெற்ற வாக்குகள் 528, ஆல்வா பெற்றது 182. ((இவரது பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை இருக்கிறது. பத்து நாட்களுக்கு முன்பு கூட, தாம் உரிய காலத்தில்தான் ஒய்வு பெறுவேன், முழு பதவிக்காலத்தையும் பூர்த்தி செய்வேன் என்று பேசியிருந்தார் தன்கர். )
ஆனால் மழைக்காலக் கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே தன் உடல்நிலையை காரணம் காட்டி ராஜினாமா செய்வதாக குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பினார். 74 வயதாகும் தன்கர் , கடந்த மார்ச் மாதம் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
அப்போது பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஜெக்தீப் தன்கரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் பாஜகவின் தேசிய தலைவர் பொறுப்புக்கு ஜெகதீப் தன்கர் நியமிக்கப்படலாம் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் டெல்லி வட்டாரங்களில் உலா வருகின்றன. இன்னொரு பக்கம் இதை மறுத்தும் பாஜக பிரமுகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில் டெல்லி நீதிபதி வீட்டில் பணம் எடுத்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நோட்டீஸை தன்கர் ஏற்றுக் கொண்டது பாஜக தலைமையை கோபத்துக்குள்ளாக்கியதாகவும், இதனாலேயே அவர் ராஜினாமா முடிவை எடுத்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்பதாக அறிவித்திருக்கிறார். நவீன அரசியலுக்கேற்ப மாநிலங்களவையை திறம்பட நடத்தியவர் தன்கர் என பிரதமரும் தன்கரை பாராட்டி உடல்நலத்தை கவனிக்கச் சொல்லியிருக்கிறார். ஜெகதீப் தன்கர் ஓய்வெடுக்கப் போகிறாரா? சிறிய ஓய்வுக்குப் பிறகு தனது அடுத்த இன்னிங்சை தொடங்குவாரா? காத்திருப்போம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved