Also Watch
Read this
By: Manigandan Raja

மாணவனை தடுத்து நிறுத்தி வணக்கம் வைத்த கோலி :
டெல்லி கிரிக்கெட் அகாடமி திறப்பு விழாவில் தனது கால்களை தொட்ட மாணவனை தடுத்து நிறுத்திய விராட் கோலி அந்த மாணவனுக்கு வணக்கம் வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆர்.கே புரத்தில் கிரிக்கெட் அகாடமி திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இதில் தனது சிறுவயது பயிற்சியாளரான ராஜ்குமார் ஷர்மாவுடன் கலந்து கொண்ட விராட் கோலி உங்களது லட்சியத்தை அடைய முழு அர்ப்பணிப்புடன் செயல்படுங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
ஒடிசா அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி :

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ஒடிசா அணியை வீழ்த்தி ஈஸ்ட் பெங்கால் அணி வெற்றி பெற்றது. கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் - ஒடிசா எப்.சி. அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் பிபின் சிங் ஆட்டத்தின் 11-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்த நிலையில், அதே அணி வீரர் யூசுப் 70 மற்றும் 83-வது நிமிடங்களில் என இரண்டு கோல்கள் அடித்தார். இதனால் ஆட்டநேர முடிவில் ஈஸ்ட் பெங்கால் அணி 3க்கு 0 என்ற கோல் கணக்கில் ஒடிசா எப்.சி. அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
முன்னணி வீராங்கனை அரினா சபலென்கா காலிறுதிக்கு முன்னேற்றம் :

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீராங்கனையான அரினா சபலென்கா காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார். ஸ்பெயினில் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா, ஜப்பானின் நவோமி ஒசாகா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக விளையாடிய ஒசாகா முதல் செட்டை 7-6 என வென்ற நிலையில், அதிரடியாக ஆடிய சபலென்கா அடுத்த இரு செட்களை 6க்கு 3, 6க்கு 2 என்ற கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
முன்னணி வீரரான லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வி :

மேட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் முன்னணி வீரரான லாரன்சோ முசெட்டி அதிர்ச்சி தோல்வியடைந்தார். ஸ்பெயினில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் நம்பர் 6 வீரரான இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, செக் குடியரசின் ஜிரி லெஹெகா உடன் மோதினார். இதில் சிறப்பாக விளையாடிய ஜிரி லெஹெகா 6க்கு 3, 6க்கு 3 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
பஞ்சாப்பை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி :
ஐபிஎல் தொடரின் 40-வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. பஞ்சாப்பில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 222 ரன்கள் எடுத்தது.
இதனால் 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 19 புள்ளி 2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணி தனது முதல் தோல்வியை சந்தித்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved