Also Watch
Read this
By: Manigandan Raja

ஈரானுக்கு பகிரங்கமான எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் :
ஈரான் ஒப்பந்தத்தைக் கடைபிடிக்காவிட்டால், தான் செய்ய வேண்டியதை செய்வேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானை எச்சரித்துள்ளார்.
ஒப்பந்தத்தின் படி ஈரான் செயல்படாவிட்டாலோ அல்லது முறையாக நடந்து கொள்ளவில்லையென்றாலோ பதிலடி கொடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
ரோ கன்னா ஒரு கொள்ளையன் என எலான் மஸ்க் விமர்சனம் :

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ரோ கன்னா ஒரு கொள்ளையன் என டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் விமர்சித்துள்ளார். எலான் மஸ்க்கின் DOGE அமைப்பு வெளிநாட்டு உதவி நிதியை நிறுத்தியதால் சுமார் நாலரை மில்லியன் குழந்தைகள் இறக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ரோ கன்னா குற்றம்சாட்டியிருந்தார். அதற்கு மறுப்பு தெரிவித்த எலான் மஸ்க் அவர் மீது வழக்குத் தொடரப்போவதாக எச்சரித்ததையடுத்து, இருவருக்குமான மோதல் முற்றியது.
காங்கிரஸில் ரோ தான் முதன்மைப் பங்கு வர்த்தகர் என்றும், கடந்த ஆண்டு மட்டும் அவர் மேற்கொண்ட நாலாயிரத்து 300 வர்த்தகங்களின் மொத்த மதிப்பு 59 மில்லியன் டாலர்கள் எனவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் டிசி பகுதியில் 9.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு வீட்டையும் ரோ கன்னா வாங்கியுள்ளதாக எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.
அமெரிக்கா மோதல்களை தூண்டுவதாக கிம் குற்றச்சாட்டு :

நொடிக்கு நொடி மாறி வரும் உலகளாவிய பாதுகாப்பு சூழலை எதிர்கொள்வதற்கு, தங்கள் நாட்டின் அணு ஆயுத திறன்களை விரிவுபடுத்துவது தான் ஒரே வழி என வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.
ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பாவில் மோதல்களை தூண்டி விட்டு, நிலைமையை மோசமாக்கி விட்டதாக அமெரிக்கா மீது குற்றம்சாட்டினார்.
மேலும் வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து, தங்கள் கூட்டு ராணுவ மற்றும் அணுசக்தித் திறன்களைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம், கொரிய தீபகற்பத்தின் பாதுகாப்பு சூழலை ஆபத்தானதாக மாற்றி வருவதாகவும் கிம் சாடியுள்ளார்.