Also Watch
Read this
By: Manigandan Raja

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தட்சிணாமூர்த்தி கோவில் தெரு எதிர்புறத்தில் செண்பகவல்லி அம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவில் இடத்தில் சுமார் 40 ஆண்டுகளாக அரசு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் தற்போது 15 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன்வாடி மையத்திலிருந்து 10 அடி தூரத்தில் தனியார் மதுபான கூடம் செயல்பட்டு வருகிறது.
10 அடி தூரத்தில் அங்கன்வாடி மையம் இருந்தும் தனியார் மதுபான கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது மட்டுமின்றி, வாகன காப்பகம் என்ற பெயரில் அந்த மதுபான கூட்டத்திற்கு இந்து சமய அறநிலையத்துறை இடமும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது.
தனியார் மதுபான கூட்டத்திற்கு அனுமதி கொடுத்த போதே அங்கன்வாடி மையத்திற்கு ஒரு மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் சுற்றி சுவர் எழுப்ப வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் கோவில் நிர்வாகம் அங்கன்வாடி மையத்திலிருந்து சென்ற மாற்று பாதையை சுற்றி சுவர் எழுப்பி அந்தப் பாதையும் மறைத்துவிட்டது.
தற்போது மதுபானக்கூடம் இருக்கும் சாலை வழியாகத்தான் குழந்தைகள் சென்று வர வேண்டிய சூழ்நிலை உள்ளது. அது மட்டுமல்ல இரவு நேரங்களில் மது பிரியர்கள் அங்கன்வாடி மையத்தை மது அருந்தும் இடமாக மாற்றி வைத்துள்ளனர்.

மது அருந்திவிட்டு மது பாட்டில்களை அங்கே உடைத்து விட்டு செல்வதால் காலையில் அங்கன்வாடி மையத்திற்கு வரக்கூடிய குழந்தைகள் அதில் மிதித்து அவர்களுக்கு காயம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குழந்தைகள் எண்ணிக்கை குறைந்து வரும் சூழல் இருப்பது மட்டுமின்றி அவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும் நிலவுகிறது.
எனவே இந்த அங்கன்வாடி மையத்திற்கு மாற்றுப்பாதை அமைத்து தர வேண்டும், அங்கன்வாடி மையத்தை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும், தனியார் மதுபான கூடத்திற்கு வாகன காப்பகம் என்ற பெயரில் கோவில் இடம் குத்தகைக்கு விடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
மேலும் அங்கன்வாடி மையத்திற்கான கட்டிடங்களை அரசு கட்டிக் கொடுத்திருந்தாலும், அந்த இடம் இந்து சமய நிலை அறநிலையத்திற்கு சொந்தமான இடம் என்பதால் தற்போது வரை கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் நிர்வாகத்திற்கு மாந்தோறும் தரை வாடகை கொடுக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே அதையும் மாற்றி அமைக்க வேண்டும் என்பது கோரிக்கையாக உள்ளது.