Also Watch
Read this
By: Manigandan Raja

கடலோர மாகாணங்களுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பு என கணிப்பு :
அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் மக்கள் தொகை 6 கோடி வரை குறையும் என ரோடியம் ஆராய்ச்சி நிறுவனம் கணித்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்ததால் இந்த மக்கள் தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டு சுமார் 7.92 மில்லியன் குழந்தைகள் பிறந்த நிலையில் இது முந்தைய ஆண்டை விட 17 சதவீதம் குறைவு என கூறப்பட்டுள்ளது.
மேலும் சீனாவின் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த செழிப்பான கடலோர மாகாணங்கள் அதிகம் பாதிக்கப்படும் என்பதால் பொருளாதாரத்தில் பெரும் சுமை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் மட்டும் 45,800 பேர் பணிநீக்கம் :

கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 45 ஆயிரத்து 800 பேர் உலகளவில் தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளிலேயே இது மிக மோசமான பணிநீக்கம் என பணிநீக்கங்களைக் கண்காணிக்கும் Layoffs.fyi தளம் தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு ((AI)) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, செலவுக் குறைப்பு நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களின் மறுசீரமைப்பு ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகக் கூறப்படுகின்றன. சமீபத்தில் மெட்டா நிறுவனம் சுமார் 8 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்திருப்பது குறிப்பிடதக்கது.
திருடப்பட்ட தானியங்களை வாங்குவது சட்டவிரோதம் :

ரஷ்யாவால் திருடப்பட்ட உக்ரைன் நாட்டின் தானியங்களை வாங்குவது சட்டவிரோதமானது எனவும், திருட்டு தானியங்கள் மூலம் லாபம் ஈட்ட முயற்சிக்கும் இஸ்ரேல் மீது பொருளாதார தடைகளை விதிக்க உள்ளதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திருடப்பட்ட தானியங்களை ஏற்றி வந்த கப்பல் இஸ்ரேல் துறைமுகத்தை சென்றடைந்துள்ளதாக கூறிய ஜெலன்ஸ்கி, தங்கள் நாட்டின் துறைமுகங்களுக்கு எந்தெந்த கப்பல்கள் வருகின்றன, அவை என்ன வகையான சரக்குகளை கொண்டு வருகின்றன என்பது பற்றி இஸ்ரேலுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என சாடியுள்ளார்.
நியூயார்க்கின் ஃபிஃப்த் அவென்யூவில் நடந்த திருமண ஊர்வலம் :
நியூயார்க்கில் புகழ்பெற்ற ஃபிஃப்த் அவென்யூவில் நடைபெற்ற இந்தியத் தம்பதியரின் பிரம்மாண்டமான திருமண ஊர்வலம் அப்பகுதியையே ஸ்தம்பிக்கச் செய்தது. இசையில் அதிக ஆர்வம் கொண்ட மணமக்கள் தங்கள் திருமண விழாவை நேரலை நிகழ்ச்சியாக மாற்றினர்.
பாரம்பரிய ஊர்வலத்திற்குப் பதிலாக, இந்த ஜோடி தங்கள் கைகளில் மைக்கை ஏந்தியபடி, பாலிவுட் வெற்றிப் பாடல்களுக்குப் பாடியும் ஆடியும் ஊர்வலம் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
89 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயம் :
கிரீஸின் ஏதென்ஸில் 89 வயது முதியவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்தனர். கெராமிகோஸ் பகுதியில் உள்ள அலுவலகத்தில் ஒரு ஊழியரைச் சுட்ட பிறகு, அவர் நீதிமன்ற வளாகத்திலும் துப்பாக்கிச் சூடு நடத்தி விட்டு அங்கிருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கான சரியான காரணம் தெரியாத நிலையில் அவர் நீதிமன்றத்தில் ஆவணங்கள் அடங்கிய உறைகளை விட்டுச் சென்றதாகக் கூறப்படுகிறது. தலைமறைவான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்து :

இந்தோனேசியாவில் இரண்டு பயணிகள் ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. பெகாசி திமூர் ((Bekasi Timur)) ரயில் நிலையத்தில், நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் ரயில் மீது மற்றொரு விரைவு ரயில் மோதியது. இதில் பெண்கள் கோச் பலத்த சேதமடைந்த நிலையில் 88 பேர் காயமடைந்ததாக சொல்லப்படுகிறது.
இதையடுத்து இடிபாடுகளை அப்புறப்படுத்தும் பணி நடந்து வரும் நிலையில், விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரணை தீவிரமடைந்துள்ளது.