Also Watch
Read this
By: Manigandan Raja

ஹோர்முஸ் நீரிணையை திறந்து போக்குவரத்து சீர் செய்யப்படும் :
போரை முடிவுக்கு கொண்டுவர 3 முக்கிய நிலைகளை குறிப்பிட்டு அமெரிக்காவிடம் புதிய முன்மொழிவை ஈரான் அரசு வழங்கியுள்ளது. அதில், முதல்கட்டமாக போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் எனவும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
அடுத்தகட்டமாக, அமெரிக்க படைகள் முழுவதும் பின்வாங்க வேண்டும் எனவும், பிறகு, ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, கடல்வழி போக்குவரத்து சீர்செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளது. நிறைவாக, இவை இரண்டும் நடந்தால், இறுதியாக அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் குறித்து அமெரிக்க குழுவிடம் ஈரான் விவாதிக்கும் என தெரிவித்துள்ளது.
ஈரானின் 3 புதிய முன்மொழிவுகள்: டிரம்ப் பரிசீலனை :
ஈரானின் புதிய முன்மொழிவு குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் தேசிய பாதுகாப்பு குழுவினருடன் விவாதித்து வருவதாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். தொடரும் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்தும் ஈரான் புதிதாக 3 முன்மொழிவுகளை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி :
போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் ஈரானின் உள்கட்டமைப்புகள் வெடிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்த நிலையில் ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் போன்ற உள்கட்டமைப்புகளில் ஏதேனும் சேதம் ஏற்பட்டால் அதைவிட வளைகுடா நாடுகளில் 4 மடங்கு சேதம் ஏற்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
"அமைதி பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் சரியான நாடு அல்ல" :
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தைக்கு, பாகிஸ்தான் சரியான நடுநிலையாளர் அல்ல என ஈரான் எம்பி தஷ்டேசன் தெரிவித்துள்ளார். மேலும், இருநாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் விருப்பங்களை நிறைவேற்றவே பாகிஸ்தான் பாடுபடுவதாகவும், அமெரிக்க விருப்பங்களுக்கு எதிராக பேச மறுப்பதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
ஈரானின் நலன்களை பாதுகாக்க ரஷ்யா உதவி செய்யும் :

ஈரானின் நலன்களை பாதுகாக்க ரஷ்யா தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யும் என ரஷ்ய அதிபர் புதின் கூறியதாக ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ஈரானின் தற்போதைய கடினமான சூழ்நிலையை வெற்றிகொண்டு, விரைவில் அமைதியை மீட்டெடுக்கும் என தாம் நம்புவதாக புதின் கூறியதாகவும் தெரிவித்துள்ளன.
ஈரான் அமைச்சர் அப்பாஸ் அராக்சி, ரஷ்யா சென்று புதினை சந்தித்தார்.
சூடானில் சிறிய ரக விமானம் விபத்து: 14 பேர் உயிரிழப்பு :
சூடான் நாட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் கென்யா நாட்டை சேர்ந்த 2 பேர் உட்பட14 பேர் உயிரிழந்தனர். தலைநகர் ஜூபாவின் புறநகர் பகுதியில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனையடுத்து தேடும் பணியின்போது ஜூபாவிலிருந்து 20 கிலோ மீட்டர் துாரத்திலுள்ள மலை பகுதியில் எரிந்த நிலையில் விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.
உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு வட கொரியா ஆதரவு :

உக்ரைன் மீதான ரஷ்ய போருக்கு வட கொரியா தனது ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு ஏவுகணைகள், வெடிபொருட்கள், ராணுவ உதவிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. இதற்கு பதிலாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள வட கொரியாவிற்கு ராணுவ தொழில்நுட்பங்கள், உணவு, எரிசக்தி உள்ளிட்ட உதவிகளை ரஷ்யா வழங்கி வருகிறது.
தண்ணீர் பிரச்னையில் இரு தரப்பினர் மோதல்: 42 பேர் பலி :
மத்திய ஆப்பிரிக்காவில் தண்ணீர் பிரச்னை தொடர்பாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 42 பேர் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது. "சாட்" நாட்டின் வடிபிரா மாகாணத்தில் உள்ள ஐகொடி கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் துப்பாக்கி உள்பட பயங்கர ஆயுதங்களால் மோதிக் கொண்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved