Also Watch
Read this
By: Manigandan Raja

கடன்பெற்று மோசடி :
பொய் கணக்கு காண்பித்து பாரத ஸ்டேட் வங்கி கூட்டமைப்பில் 311 கோடி ரூபாய் கடன்பெற்று மோசடி செய்த வழக்கில், 'தங்கம் ஸ்டீல் லிமிடெட்' மற்றும் 'பி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ் பிரைவேட் லிமிடெட்' ஆகிய நிறுவனங்களுக்கு சொந்தமான 7 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர்.
சிபிஐ பதிவு செய்த இரண்டு முதல் தகவல் அறிக்கைகளின் அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் சென்னை மண்டல அமலாக்கத்துறை இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது. இந்த மோசடி வழக்கில் சிபிஐ ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறையின் முதற்கட்ட விசாரணையில், இரும்பு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த இந்நிறுவனங்களின் இயக்குநர்கள், வங்கிகளை ஏமாற்றுவதற்காகப் பல முறைகேடுகளில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில், போலியான நிதிநிலை அறிக்கைகள் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட இருப்பு விவரங்களைச் சமர்ப்பித்து, கடன் மற்றும் கடன் உறுதிப்பத்திர எல்லைகளை சட்டவிரோதமாக உயர்த்தியுள்ளனர்.
உண்மை நிதிநிலையை மறைக்க, ஸ்டேட் வங்கிக்கு ஒரு கணக்கு வழக்கையும், நிறுவனங்களின் பதிவாளருக்கு வேறொரு கணக்கு வழக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.இல்லாத போலி குடோன்கள் மற்றும் போலியான போக்குவரத்து ரசீதுகளைக் காட்டி வங்கியை நம்ப வைத்துள்ளனர்.
போலி நிறுவனங்களின் வங்கி கணக்குகள் மூலம், பல அடுக்கு பரிவர்த்தனைகளாக நிதியைத் திசைதிருப்பி, மற்றொரு இரும்பு ஆலையையும், இயக்குநர்களின் சொந்த சொத்துக்களையும் வாங்கியுள்ளனர்.
இதன் மூலம் எஸ்பிஐ வங்கி கூட்டமைப்புக்கு சுமார் 311 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி, தங்களுக்கு சட்டவிரோத லாபத்தை ஈட்டியுள்ளனர்.கடந்த மே 19 அன்று சென்னையில் உள்ள இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் முக்கிய கூட்டாளிகளின் 7 வளாகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
மோசடிப் பணத்தில் வாங்கிய சொத்துக்களை வங்கி ஜப்தி செய்யாமல் இருக்க, தங்களது தூரத்து உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களில் சொத்துக்களைப் பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 43 அசையா சொத்துக்கள் பினாமி பெயர்களில் இருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.மேலும், மோசடி தொடர்பான டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் முக்கிய ஆவணங்களையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved