Also Watch
Read this

பிளஸ்-டூ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு தூக்கு தண்டனை விதித்து நெல்லை போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. காட்டுப்பகுதியில் சிறுமியை மிரட்டி பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கிய மற்ற 2 இளைஞர்களுக்கும் நீதிமன்றம் விதித்த தீர்ப்பு என்ன? தண்டனை விவரங்கள் ஆகியவை குறித்து இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.

அரசுப்பள்ளி மாணவி...
நெல்லையில் உள்ள ஒரு அரசுப்பள்ளியில் 16 வயது சிறுமி +2 படித்து வந்தார். அந்த பள்ளிக்கு கடந்த 2022ஆம் ஆண்டு பெயிண்டிங் வேலைக்காக வந்த தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தை சேர்ந்த முனீஸ்வரன் என்ற இளைஞன், மாணவியை காதலிப்பதாகவும், பள்ளி படிப்பு முடிந்தவுடன் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

காட்டுப்பகுதியில்...
இதனை நம்பிய மாணவி முனீஸ்வரனிடம் அடிக்கடி பேசியதாக தெரிகிறது. இதனை, தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட இளைஞன், மாணவியை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அந்தநேரம், காட்டுப்பகுதிக்கு வந்த கொக்கிரகுளம் பகுதியை சேர்ந்த சின்னகுட்டி, முருகேசன் ஆகிய 2 பேரும் சிறுமியை மிரட்டி பாலியல் சித்ரவதைக்கு ஆளாக்கி உள்ளனர்.

குற்றவாளிகள் கைது
திருமணம்செய்து கொள்வதாக சிறுமியை ஏமாற்றி சீரழித்த முனீஸ்வரன், சின்னகுட்டியும், முருகேசனும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டபோது காப்பாற்றக்கூட முற்படவில்லை. இதனால், கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய சிறுமி நடந்த விவரத்தை தனது பெற்றோரிடம் கூறியதோடு பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரும் அளிக்கப்பட்டது. இதன்பேரில் விசாரணையில் இறங்கிய போலீசார், முனீஸ்வரன், சின்னகுட்டி, முருகேசன் ஆகிய 3 பேரையும் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

சிறப்பு நீதிமன்றத்தில்...
இந்த வழக்கு நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் மாணவியிடம் நடத்தப்பட்ட விசாரணை அறிக்கை மற்றும் மருத்துவ பரிசோதனைகள் ஆய்வு செய்யப்பட்டது. இது தொடர்பான, வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டன.

தண்டனை விவரம்
இதனை விசாரித்த நீதிபதி சுரேஷ்குமார், குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முனீஸ்வரன், சின்னகுட்டி, முருகேசன் ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என அறிவித்தார். தொடர்ந்து, தண்டனை விவரமும் அறிவிக்கப்பட்டது. முக்கிய குற்றவாளியான சின்னகுட்டிக்கு தூக்குத் தண்டனை விதித்த நீதிபதி, முருகேசனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், முனீஸ்வரனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

போக்சோ வழக்குகளில்...
இதில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட சின்னகுட்டி மீது ஏற்கெனவே கொ*, கொ*முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் வெவ்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மட்டும் போக்சோ வழக்குகளில் குற்றவாளிகள் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், இதுவரை நெல்லை போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் 10 பேருக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved