Also Watch
Read this
By: Manigandan Raja

ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 30 லட்சம் :
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா என தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காரியாபட்டி அருகே ஆவியூர் பகுதியில் ஆனந்த்பாபு தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை செல்லும் தனியார் பேருந்தில் பணம் கொண்டு செல்லப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஆவியூர் பேருந்து நிறுத்தத்தில் பேருந்து பயணிகளிடம் தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது மதுரையிலிருந்து அருப்புக்கோட்டை நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில் இருந்து ஆவியூர் பேருந்து நிறுத்தத்தில் வந்து இறங்கிய ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த முத்து என்பவர் வைத்திருந்த இரண்டு கட்டை பைகளில் அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அதில் ஆவணம் இல்லாமல் கட்டு கட்டாக ரூ 30,31,000 பணம் இருப்பது தெரிய வந்தது. மேலும் மதுரையில் நிலம் விற்ற காசு என முத்து கூறினாலும் அந்த பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாத காரணத்தினால் பணத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று திருச்சுழி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலர் சாந்தியிடம் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூபாய் பத்து லட்சத்திற்கு அதிகமாக இருந்ததால் விருதுநகர் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் வைத்து முத்து விடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved