Also Watch
Read this
தமிழ்நாடு மைனர் இனாம் ஒழிப்புச் சட்டத்தின் கீழ், அதிகாரிகளால் தவறுதலாக முடக்கப்பட்டிருந்த 3 ஆயிரத்து 85 ஏக்கர் சொந்த பட்டா நிலங்களை தவெக அரசு அதிரடியாக விடுவித்திருக்கிறது. கரூருக்கு வந்த முதலமைச்சர் விஜயிடம், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கோரிக்கை வைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே பறந்த இந்த அதிரடி உத்தரவு, கரூர் மண்ணில் ஒரு புதிய அரசியல் சதுரங்க ஆட்டத்தைத் தொடங்கியிருக்கும் நிலையில், பல ஆண்டு கால நிர்வாகப் பிழைக்கு காரணமான அதிகாரிகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க போகிறது?

அரை நூற்றாண்டு கால அழுகை
கரூரின் விளிம்பு நிலை மக்களின் அரை நூற்றாண்டு கால அழுகைக்கும், நில உரிமைப் போராட்டத்திற்கும் ஒருவழியாக விடிவுகாலம் பிறந்திருக்கிறது.
கரூர் மாவட்டத்தின் எளிய விவசாய பெருங்குடி மக்களை பல ஆண்டுகளாக துயரக் கடலில் தவிக்கவிட்ட இனாம் நில விவகாரத்தில், தற்போது ஒரு மிகப்பெரிய திருப்புமனை அரங்கேறியிருக்கிறது. அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்காலும், கோப்பு பரிமாற்றங்களின் அலட்சியத்தாலும் முடக்கி வைக்கப்பட்டிருந்த மக்களின் 3 ஆயிரத்து 85 ஏக்கர் சொந்த பட்டா நிலங்களுக்கான தடையை மாவட்ட நிர்வாகம் அதிரடியாக நீக்கியிருக்கிறது.

பாதுகாப்பு கேடயத்தை...
கடந்த 1963ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு மைனர் இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரியாக மாற்றலும் சட்டத்தின் கீழ், 1965 பிப்ரவரி 15ல் ரயத்துவாரி நிலவரி திட்டம் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின்படி, காலம் காலமாக மண்ணை நம்பி விவசாயம் செய்துவந்த எளிய மக்களுக்கும், கோவில்களுக்கும் ரயத்துவாரி பட்டாக்கள் தனித்தனியாக பிரித்து வழங்கப்பட்டன. ஆனால், இடைப்பட்ட காலத்தில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை தனிநபர்கள் முறைகேடாக விற்பனை செய்வதை தடுப்பதற்காக, இந்து சமய அறநிலையத்துறை ஒரு பாதுகாப்பு கேடயத்தை உருவாக்கியது.

தவறுதலாக சிவப்பு பட்டியலில்...
இதன்படி, சம்பந்தப்பட்ட சார்பதிவாளர்களுக்கும், மாவட்ட பதிவாளர்களுக்கும் கோவில் நிலங்களை பதிவு செய்ய வேண்டாம் என உத்தரவிட்டது. ஆனால், இங்கேதான் அந்த அதிகார வர்க்கத்தின் அலட்சிய பிழை கோரத் தாண்டவமாடியது. கோவில் பெயரில் உள்ள நிலங்களின் பத்திரப்பதிவை தடை செய்யும்போது, அதே சட்டத்தின் கீழ் மக்களுக்கு சட்டப்பூர்வமாக வழங்கப்பட்ட பட்டா நிலங்களையும், அதிகாரிகள் தங்களின் மேலோட்டமான பார்வையால் தவறுதலாக சிவப்பு பட்டியலில் சேர்த்து முடக்கினர்.

முதல்வரின் நேரடி பார்வையில்...
இந்த தவறான தடையாணை காரணமாக, எளிய மக்கள் தங்களின் சொந்த நிலத்தை அவசர தேவைகளுக்கோ, பிள்ளைகளின் கல்வி, திருமணம் போன்ற வாழ்வாதார நிகழ்வுகளுக்கோ பயன்படுத்த முடியாமல் தவித்து வந்தனர். இதுதொடர்பாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் களத்தில் இறங்கி பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்த சூழலில்தான், அண்மையில் தவெக தலைவரும், முதலமைச்சருமான விஜய் கரூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார். அப்போது, இந்த அரசியல் சதுரங்கத்தில் ஒரு புதிய திருப்பமாக, அவரிடம் விஜயபாஸ்கர் பொதுமக்களின் கோரிக்கையை முன்வைத்தார். மக்கள் குறைகளை கேட்ட அடுத்த சில மணி நேரங்களிலேயே முதலமைச்சரின் நேரடி பார்வையில் அதிகார பொறிகள் சுழல தொடங்கின.

முழுமையாக நீக்கம்
வருவாய் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை கொண்ட பிரத்யேக குழு, போர்க்கால அடிப்படையில் களமிறக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட நிலங்களின் பட்டியல்கள் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இதன் முதற்கட்டமாக, எந்தவித நீதிமன்ற வழக்குகளுக்கும் உட்படாத, தவறுதலாக முடக்கப்பட்ட 471 சர்வே எண்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் கீழ் வரும் 3 ஆயிரத்து 85 ஏக்கர் நிலங்களுக்கான பத்திரப்பதிவு தடை தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.

நிரந்தர தீர்வு
கரூர் மாவட்டம் முழுவதும் இதேபோல் விடுபட்ட பிற சர்வே எண்களையும் முழுமையாகப் பரிசீலித்து, தடையை நீக்கும் நடவடிக்கை தொடரும் என மாவட்ட ஆட்சித் தலைவர் உறுதிபட தெரிவித்துள்ளார். அரசின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்றுள்ள தமிழ்நாடு இனாம் நில உரிமையாளர் சங்கத்தின் நிர்வாகி, இது முதல் படிக்கட்டு தான். இதில் இன்னும் சில உள் சிக்கல்கள் உள்ளன என்றும், அதனை முதலமைச்சரும், அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர்களும் உடனடியாக கவனத்தில் கொண்டு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அரசியல் அனல்...
தமிழக அரசின் இந்த அறிவிப்பு விவசாயிகளிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும், மக்களுக்கான அரசாக தற்போதைய தவெக அரசு செயல்படுவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது என்றும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் ராஜா பாராட்டி உள்ளார். ஆனால், இந்த நிம்மதிப் பெருமூச்சுக்கு மத்தியிலும் கரூரில் மற்றுமொரு அரசியல் அனல் வீசத் தொடங்கி உள்ளது.

நில விடுவிப்பு, நிம்மதி
இந்த நில விவகாரம் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கு விவசாயிகள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அதிகார வர்க்கத்தின் மெத்தனப் போக்கால், பல ஆண்டுகளாக தங்களின் சொந்த மண்ணிலேயே அகதிகளாக தவித்த கரூர் எளிய மக்களின் கண்ணீருக்கு, இந்த நில விடுவிப்பு நிம்மதியை தந்திருக்கிறது என்பதில் மாற்று கருத்து இல்லை.