Also Watch
Read this
லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியதும், திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு சிங்கப்பூருக்கு எஸ்கேப் ஆகிவிட்டார் என, சோஷியல் மீடியாக்களில் ரெக்கை கட்டி பறந்த வதந்திகளுக்கு, எ.வ.வேலு தனக்கு விசா கிடைத்த தேதி மற்றும் மெடிக்கல் ரிப்போர்ட் உள்ளிட்டவற்றை காண்பித்து ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுககாரன் எதற்கும் ஓடவும் மாட்டான், ஒளியவும் மாட்டான் என அக்னிப் பிழம்பாக பொங்கியவர், லஞ்ச ஒழிப்புத்துறை எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு நேரில் ஆஜராக தயாராகவே இருக்கிறேன் என்றும் கெத்து காட்டியுள்ளார்.

சென்னையில் எ.வ.வேலு...
இதுதொடர்பாக, திமுக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறி இருப்பதாவது;
ஓடுவது, ஒளிவது எல்லாம் திமுகவினருக்கு கிடையாது. மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில், ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி 2016 முதல், இதயம் சம்பந்தப்பட்ட மருத்துவம் பார்த்து வருகிறேன். 2023ல் மௌண்ட் எலிசபெத் மருத்துவமனையில் லைப் ஹெல்த் சென்டரில், உடல் பரிசோதனை முடித்து வந்தேன். தொடர்ந்து, ஐந்தாண்டு காலம் இரவு பகல் பாராமல் பணிகளை பார்த்து வந்தேன். தேர்தலுக்குப் பிறகு மீண்டும் மருத்துவம் பார்ப்பதற்காக கடந்த மாதம் 15ஆம் தேதி விசாவிற்கு அப்ளை செய்திருந்தேன், 17ஆம் தேதி விசா கொடுக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமே, 25ஆம் தேதி 02:20 விமானம் செல்வதற்கு டிக்கெட் போட்டுள்ளேன்.

காவல்துறை விசாரணை
அன்றைய தினம் காவல்துறையினர் வந்து விசாரணைக்கு அழைத்தனர். அதற்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என சொல்லி இருந்தேன்.
விசாரணைக்கு வந்த அதிகாரிகளிடம் அன்றையே தினமே சொல்லி இருந்தேன். மருத்துவ பரிசோதனைக்காக விமான டிக்கெட் புக் செய்து உள்ளேன் என்று கூறி இருந்தேன். 26ஆம் தேதி டிக்கெட்டை மாற்றி புக் செய்து மருத்துவ பரிசோதனைக்காக சென்றேன். எனக்கு நிறைய பிரச்சனை உள்ளது. இதில் நியூரோ உள்ளிட்ட மூன்று பிரச்சனைகளுக்காக முக்கியமாக பரிசோதனைக்கு சென்றேன்.

ஆஜராக சம்மன்
இத்தகைய சூழலில், மூன்றாம் தேதி என்னை ஆஜராகுமாறு வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டதாக கூறப்பட்டது. நான் அதனை பேக்ஸில் அனுப்ப சொன்னேன்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, நான் சிகிச்சை முடித்து வருவதற்கு பத்து தினங்கள் ஆகும் என பதில் அனுப்பி உள்ளேன். எந்த தேதியில் அழைத்தாலும் முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன் என்று, வழக்கறிஞர் மூலமாக கடிதம் அனுப்பி உள்ளேன்.

ஓடவில்லை, ஒளியவில்லை...
இதில் எங்கு ஓடினேன்? எங்கு பதுங்கினேன்? வழக்கறிஞர் மூலமாக கடிதம் கொடுத்து உள்ளேன். விசாரணைக்கு ஆஜராகிறேன் என்றும் கூறியுள்ளேன்.
சமூக வலைதளங்களில் கற்பனையை அவிழ்த்து விட்டு உள்ளனர். என்னை டார்க்கெட் செய்வதாக நான் நினைக்கவில்லை. நீதிக்கு தலை வணங்குகிறேன். மருத்துவரின் ஆலோசனைப்படி, சென்னை திரும்பி உள்ளேன்.
இவ்வாறு எ.வ.வேலு கூறி உள்ளார்.