Also Watch
Read this

கரிசல் மண்ணின் வாழ்வியலை கசடற எழுதியவரும், 'அஞ்ஞாடி' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் பூமணி காலமானார். வெற்றிமாறன் இயக்கிய அசுரன் திரைப்படத்தின் அடிப்படையான, வெக்கை நாவலை எழுதியவருக்கு ஏராளமானோர் மரியாதை செலுத்தினர். எழுத்தாளர் பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் கூறி உள்ள முதலமைச்சர் விஜய் இரங்கல் தெரிவித்ததுடன், இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

சாகித்ய அகாடமிக்கு பெருமை
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பூமணி காலமானார். அவருக்கு வயது 79.
கடந்த 1947ஆம் ஆண்டு, ஆண்டிபட்டியில் பூமணி பிறந்தார். இலக்கியத்தின் மீது ஆர்வம் கொண்டவர், பல்வேறு சிறுகதைகள், நாவல்களை எழுதி உள்ளார். வெக்கை, பிறகு, வாய்க்கால், வரப்புகள், அஞ்ஞாடி போன்ற நாவல்கள் அவரது எழுத்தில் புகழ் பெற்றவை.

இதில், ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக எழுத்தாளர் பூமணிக்கு 2014ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைக்கப்பெற்றது. தலித் படைப்பிலக்கியம் என்று உருவாகும் முன்னரே, ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பின்னணியாக கொண்டு ‘பிறகு’ என்ற நாவலை பூமணி எழுதி உள்ளார்.

10 ஆண்டு ஆராய்ச்சி படைப்பு
சிறுகதை, மொழிபெயர்ப்பு, திரைப்படம் என பல்வேறு தளங்களில் இயங்கி வந்த கரிசல் காட்டுப் படைப்பாளியான பூமணி, 10 ஆண்டுக்கும் மேலாக ஆய்வு செய்து எழுதிய பிரம்மாண்ட வரலாற்று நாவலான ‘அஞ்ஞாடி’, 2014ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதை பெற்றது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட ‘அஞ்ஞாடி’ நாவலை ஒரு கலைப்படைப்பாகவும் மானுடவியல் ஆவணமாகவும், வெவ்வேறு சமூகங்களின் வரலாற்று நூலாகவும் வாசிக்க முடியும் என்பது இலக்கிய விமர்சகர்களின் பார்வையாக உள்ளது.

வெக்கை தான் அசுரன்...
1982ஆம் ஆண்டில் வெளியானன இவரது ‘வெக்கை’ நாவல், சிறுவன் சிதம்பரத்தையும் அவனது தந்தை பரமசிவனையும் மையமிட்டிருப்பது. ஒரு குற்றத்தையும், அதைத் தொடர்ந்த அவர்களின் தலைமறைவு வாழ்க்கையையும் பேசும் இந்நாவல் வெற்றிமாறனின் இயக்கத்தில் ‘அசுரன்’ திரைப்படமாக வெளி வந்தது. இலக்கிய உலகை தாண்டி,திரை உலகிலும் முத்திரை பதித்தது. இலக்கியவாதிக்கு, பலவேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து, மரியாதை செலுத்தினர்.
