Also Watch
Read this
வியட்நாமில், படகு கவிழ்ந்த விபத்தில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய குடும்பத்தினர்கள் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது. உடலை சொந்த ஊர்களுக்கு கொண்டு வந்து ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வியட்நாம் சுற்றுலா
லாவா நிறுவனம் சார்பில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்ட 10 தமிழர்கள் உட்பட 15 இந்தியர்கள், வியட்நாமில் உள்ள பூகுவோக் Phu Quoc தீவு அருகே படகு கவிழ்ந்த விபத்தில், பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை கொண்டு வருவதோடு, காயமடைந்தவர்களை பாதுகாப்பாக அழைத்து வர தமிழக அரசு சார்பில் சிறப்பு அதிகாரியாக சேலம் டிஐஜி சந்தோஷ் ஹதிமாணி நியமிக்கப்பட்ட நிலையில், அவர் வியட்நாம் சென்றடைந்தார்.

விபத்து குறித்து விசாரணை
இந்த படகு விபத்து தொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் லே மின் ஹங்(Lê Minh Hưng) உத்தரவிட்டுள்ளார். படகை வேகமாக இயக்கியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், கேப்டனை பிடித்து விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அழகு ராஜன், ஷேக் அப்துல்லா மற்றும் பாலாஜி ஆகிய 3 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழும் காட்சி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விரைந்து நடவடிக்கை
வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த வினையகுமார் படகு விபத்தில் உயிரிழந்த நிலையில், இதனை அறிந்த மனைவி ஜெய ஸ்ரீ மற்றும் 13 வயது மகள் சில மணி நேரம் சுயநினைவின்றி உறைந்தது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினையகுமாரின் மாமனார் பிரபாகர் கோரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே வேலூர் எம்.எல்.ஏ. வினோத் கண்ணன், வினையகுமார் வீட்டிற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

திண்டுக்கல், திருவள்ளூரில்...
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த முருக பிரபு படகு விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவருடைய குடும்பத்தினரை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்த அமைச்சர் விக்னேஷ் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த பாபு என்பவரும் படகு கவிழ்ந்த விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவரும் கல்லூரியில் படித்து வரும் நிலையில், தந்தையின் இழப்பை ஈடு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.