Also Watch
Read this
சென்னை புழல் அருகே பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது,ஜே.சி.பி. எந்திரத்தின் பெல்ட் அறுந்து பெரிய இரும்பு தகடு விழுந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். தந்தையின் கை பிடித்தபடி பேக்கரிக்கு சென்று ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு ஆசையுடன் வீடு திரும்பிய சிறுவன், பாதியிலேயே உயிரிழந்தது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராட்சத குழாய் பதிக்கும் பணி
சென்னை புழலை அடுத்த காவாங்கரை, கண்ணப்பசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ். ஐ.டி. ஊழியரான இவருக்கு ஷாருக் ஈஸ்வரன் என்ற 3 வயது மகன் இருந்தான். சனிக்கிழமை மாலை, விக்னேஷ் தமது மகனை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பேக்கரிக்கு சென்று ஸ்நாக்ஸ் வாங்கிக் கொண்டு 23ஆவது வார்டு வழியாக வீட்டிற்கு திரும்ப, சிறுவனும் துள்ளிக் குதித்தபடியே நடந்து வந்தார். 23ஆவது வார்டில் பாதாள சாக்கடை திட்டத்திற்காக பூமியில் ராட்சத குழாய் அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். விக்னேஷ் தன் மகனுடன் நடந்து வந்தபோது, அங்கு ஜேசிபி இயந்திரத்தின் மூலம் ஒரு பெரிய இரும்பு தகடை பூமியில் புதைப்பதற்காக மேலே தூக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக, பாரம் தாங்க முடியாமல் ஜேசிபி எந்திரத்தின் கயிறு திடீரென அறுந்ததில், இரும்பு தகடு, பயங்கர சத்தத்துடன் கீழே விழுந்தது.

இரும்புத் தகடு...
பயங்கரமான அந்த நொடியில், தந்தை விக்னேஷ் நூலிழையில் உயிர் தப்பிக்க, அவரது கையைப் பிடித்து நடந்து வந்த 3 வயது சிறுவனின் வயிற்றுப் பகுதியில் அந்த இரும்பு தகடு நேராக விழுந்து அமுக்கியது. தன் கண் முன்னாலேயே தன் செல்ல மகன் இரும்பு தகட்டின் அடியில் சிக்கித் துடித்ததைக் கண்டு விக்னேஷ் அலறிய அலறல் அங்கிருந்தவர்களை உலுக்கியெடுத்தது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடிதுடித்த சிறுவன் மீட்கப்பட்டு மாதவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நள்ளிரவு வரை மருத்துவர்கள் போராடியும், அந்தப் பிஞ்சு உயிர் சிகிச்சை பலனின்றிப் பிரிந்தது.

காவல்துறை வழக்குப்பதிவு
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், துணை ஒப்பந்தரார் தீலிப் பாரிக், பாதாள சாக்கடை திட்டப் பணிகளின் திட்ட மேலாளர் முத்துகுமார், துணை திட்ட மேலாளர் அருட்செல்வன், மேற்பார்வையாளர் வெங்கடேசன், ஜேசிபி ஆபரேட்டர் ரமேஷ், ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 5 பேர் மீதும் பணியில் அஜாக்கிரதையாக இருந்து மரணத்தை விளைவித்தது, கொலையில்லாத மரணம் என்ற இரண்டு பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது.

யாரிடமும் பதில் இல்லை...
மகனை பறிகொடுத்த குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரின் கண்களையும் கலங்க செய்தது. "பணம் கொடுத்தால் போன பிள்ளை மீண்டும் திரும்பி வருவானா?" என்று அவரது தாய் எழுப்பும் நியாயமான கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. கடைக்கு புறப்பட்ட போது நல்ல உடை அணிவித்து விட்டதாகவும், ஷாருக் ஈஸ்வரன் அணிந்திருந்த கால்சட்டையை துவைத்து போட்ட நிலையில், அது காயும் முன்னே இப்படி ஆகிவிட்டதே, எனச் சிறுவனின் பாட்டியின் கதறல் கேட்போரை நெகிழ விட்டது.

விதிமுறைகளை பின்பற்றாமல்...
மக்கள் நடமாட்டம் மிகுந்த, அதுவும் குறுகலான தெருக்களில் பாதாள சாக்கடை திட்டம் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது, பாதசாரிகளை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டிருக்க வேண்டும் அல்லது தற்காலிக தடுப்புகளை அமைத்திருக்க வேண்டும். ஆனால், எந்தவிதப் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றாமல், அலட்சியமாகப் பணிகளை மேற்கொண்டதே இந்த விபத்திற்குக் காரணம் என அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
தந்தை ஆசையாய் வாங்கிக் கொடுத்த தின்பண்டங்கள் அப்படியே கிடக்க, அவற்றைச் சாப்பிடக்கூட முடியாமல் 3 வயது குழந்தை மறைந்த சம்பவம் காவாங்கரை பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.