Also Watch
Read this
காலமெல்லாம் நிறைந்திருக்கும் இன்னிசை குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.ஜானகியின் உடலுக்கு சக கலைஞர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்த, முழு அரசு மரியாதை வழங்கி இறுதி சடங்குகள் நடைபெற்றன.

1957ல் தொடங்கிய இசைப் பயணம்
ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளப்பட்லா என்ற ஊரில் இராமமூர்த்தி- சத்தியவதி தம்பதிக்கு, 1938ஆம் ஆண்டு பிறந்த பாடகி எஸ்.ஜானகி, 1957ஆம் ஆண்டு வெளியான விதியின் விளையாட்டு என்ற திரைப்படத்தில் பாடியதன் மூலம் திரையுலகில் தனது இசைப்பயணத்தை தொடங்கினார்.

48,000க்கும் மேற்பட்ட பாடல்கள்
தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் என்று, 17 இந்திய மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய எஸ்.ஜானகி, தமது 88வது வயதில் காலமானார். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் நிகழ்ந்த தமது ஒரே மகனின் மறைவுக்கு பின்னர், மைசூர் இல்லத்தில் மனம் தளர்ந்த நிலையில் வாழ்ந்ததாகவும், மகனின் மறைவு அவரது இறுதி காலத்தை விரைந்து வர செய்ததாகவும் உறவினர்கள் கூறியுள்ளனர்.

இறுதி அஞ்சலி, இரங்கல்
எஸ்.ஜானகியின் உடல் காலை முதல் மதியம் வரை மைசூர் மகாராஜா மைதானத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமானவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இசை உலகின் எஸ்.ஜானகியுடன் நீண்டகாலம் உடன் பயணித்த மனோ, சித்ரா, சுஜாதா உள்ளிட்டோர் துக்கம் தாங்காமல் கண்ணீர் சிந்தினர். சிரித்த முகமும், சிந்தையை இனிக்க வைக்கும் குரலுமாய் எஸ்.ஜானகியை கண்ட தங்களுக்கு இப்போது இப்படி ஒரு கோலத்தில் அவரை பார்க்கும் மனவலிமை இல்லை என அவர்கள் துக்கத்தை வெளிப்படுத்தினர்.

அரசு மரியாதையுடன்...
பொது மக்களின் அஞ்சலிக்கு பின்னர் எஸ்.ஜானகியின் உடல், மைசூர் அருகே உள்ள அவரது சொந்த பண்ணைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இறுதி சடங்குகள் நடைபெற்றன. அங்கு 30 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதை அளிக்கப்பட்டது.

இசை ரசிகர்களின் இதயத்தில்...
எஸ்.ஜானகியின் பேத்தி மற்றும் மருமகள் உள்ளிட்ட உறவினர்கள் இறுதி சடங்குகளை செய்ய அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தேனினும் இனிய குரலை சுமந்த அவரது தேகத்தை தீயின் செந்நாக்குகள் தீண்டினாலும், அவரது தேனிசை என்றும் எப்போதும் இசை ரசிகர்களின் இதயத்தில் நிறைந்திருக்கும்.