Also Watch
Read this
எழுத்தாளர் பூமணியின் மறைவு தமிழ் இலக்கிய உலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு எனக் கூறி உள்ள முதலமைச்சர் விஜய், இரங்கல் தெரிவித்ததுடன், இலக்கிய பங்களிப்பை போற்றும் வகையில் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்யப்படும் என்றும் அறிவித்து உள்ளார்.

முதலமைச்சர் விஜய் இரங்கல்
இதுதொடர்பாக, முதல்வர் விஜய் கூறி இருப்பதாவது;
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், தமிழ் இலக்கிய உலகின் குறிப்பிடத்தக்க படைப்பாளருமான பூலித்துரை மாணிக்கவாசகம் எனும் பூமணி காலமானார் என்ற செய்தி மிகுந்த வேதனை தருகிறது. கரிசல் நிலத்தின் மண் வாசனையும், அடித்தட்டு மக்களின் வாழ்வின் நுட்பமான யதார்த்தங்களும், வரலாற்றின் ஆழமான சாட்சியங்களும் நிரம்பிய படைப்புகளின் மூலம் தமிழ் இலக்கியத்தை செழுமைப்படுத்திய முக்கியமான படைப்பாளி பூமணி.

உலகறிய செய்த எழுத்து வீச்சு
பூமணியின், ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றது, அவரது இலக்கிய ஆளுமைக்கு கிடைத்த உயரிய அங்கீகாரம். அவரது ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான ‘அசுரன்’ திரைப்படம், அவரது எழுத்தின் வீச்சை உலகறியச் செய்தது. பூமணி மறைவு தமிழ் இலக்கிய உலகத்துக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு. அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், தமிழ் இலக்கிய உலகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு மரியாதை
இலக்கியத் துறையில் பூமணியின் பங்களிப்பைப் போற்றி மரியாதை செலுத்தும் வகையில், அவரது இறுதிப் பயணத்துக்கு அரசு மரியாதை வழங்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் விஜய் கூறி உள்ளார்.
