Also Watch
Read this
நல்ல வேலை, கை நிறைய சம்பளம் என ஆசை வார்த்தை கூறி ஆளில்லாத இடத்துக்கு அழைத்துச் சென்று பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து சின்னாபின்னமாக்கிய சம்பவம் மதுரையை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் இருந்து நகைகளையும் கொள்ளையடித்து தப்பிய கொடூரர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகரை சேர்ந்த பெண்
நம்பிக்கையாகப் பேசியோரை நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை, எதிர்கால வாழ்வுக்கான ஒளி தெரிவதாக எண்ணி ஏமாந்தப் பெண். ஆள் அரவமற்ற கண்மாய் கரையை பாதகச் செயலை அரங்கேற்ற தேர்ந்தெடுத்த கயவர்கள். என்ன நடந்தது?
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், கருத்து வேறுபாட்டால் கணவரைப் பிரிந்து, ராமநாதபுரம் மாவட்டம் தோழூர் அருகே தனது பிள்ளைகளுடன் தனியே வாழ்ந்து வந்தார். குழந்தைகளின் எதிர்காலத்திற்காக கட்டடக் கூலி வேலை செய்து அப்பெண், குடும்பத்தை காப்பாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது.

முதியவரை பராமரிக்க...
இந்த சூழலில் தான், மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தும்பைப்பட்டியில் ஒரு முதியவரை பராமரிக்க ஆள் தேவைப்படுவதாக செல்ஃபோனில் விளம்பரம் பார்த்ததாக அப்பெண்ணிடம் அனிதா என்பவர் கூறியுள்ளார். நிலையான வேலை, நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வேலைக்குச் செல்ல முடிவு செய்த அப்பெண், அனிதா கொடுத்த செல்ஃபோன் எண்ணை தொடர்பு கொண்டு மேலூருக்கு சென்றதாக கூறப்படுகிறது.

இருள் சூழ்ந்த இடத்தில்...
மேலூருக்கு சென்ற பெண்ணிடம் செல்போனில் பேசிய தாமரைப்பட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்ற இளைஞர், தான் வந்து அழைத்துச் செல்வதாகக் கூறியதாகக் சொல்லப்படுகிறது. இளைஞர் வந்து அழைத்ததும், வேலை செய்ய வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறோம் என நம்பி பைக்கில் ஏறிய அப்பெண், இருள் சூழ்ந்த இடத்தில் இறக்கி விடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு ஏற்கெனவே பதுங்கியிருந்த நால்வரிடம் அப்பெண்ணை கோபாலகிருஷ்னன் விட்டுச் சென்றதாக சொல்லப்படுகிறது.
தாலிச் செயின் பறிப்பு
அதன்பின்னர், அந்த நான்கு கொடூரர்களும், பெண்ணை மிரட்டி மாறி மாறி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து ஈவு இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டதாக கூறப்படுவது நடுநடுங்க வைக்கிறது. மேலும், உடல் அளவில் தளர்ந்து போய் கிடந்த பெண்ணிடம் இருந்து அவரது தாலி செயின், வெள்ளிக் கொலுசு மற்றும் செல்போனையும் பறித்துச் சென்றிருக்கிறது அக்கும்பல்.

தீவிர தேடுதல் வேட்டை
குற்றவாளிகள் அங்கிருந்து தப்பிய பிறகு, மனரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த அப்பெண் எப்படியோ அங்கிருந்து தப்பித்து அருகிலிருந்த மதுபானக் கடை பகுதியில் இருந்தவர்களிடம் நடந்ததை கண்ணீருடன் கூறி உதவி கோரியுள்ளார். அவர்களின் உதவியுடன் மேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று புகார் அளிக்கவும் செய்துள்ளார். அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மலையரசி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்ததுடன், பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலத்தின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

கயவர்கள் கைது
அப்போது, ஒன்றுமே செய்யாதது போல், வீட்டில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்த காம கொடூரன்களான தும்பைப்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார், அரவிந்த், வினித் மற்றும் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த வீரபாண்டி ஆகிய நால்வரையும், அவர்களுக்கு உதவியதாகக் கூறப்படும் கோபால கிருஷ்ணனையும் போலீசார் கைது செய்தனர். அதன் பிறகு அவர்களை மேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.

நெஞ்சம் பதறும் செயல்...
இதில், கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான செல்வக்குமார் மீது ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான புகார் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குடும்பத்துக்காக வேலை தேடிச் சென்ற பெண்ணின் நம்பிக்கையை பயன்படுத்தி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரத்தை நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் பதறத்தான் செய்கிறது.