Also Watch
Read this
Posted on: Mar 18, 2026 08:40 AM
By: Fyrose Banu

ரவுடி வேஷம் போட்ட வழிப்பறி திருடன் மறைமலைநகரில் வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்ட போலி தாதாவை போலீசார் கைது செய்தனர்.
மறைமலைநகர் பகுதியில் காயலாங்கடை உரிமையாளரைக் கொலை மிரட்டல் விடுத்து, வாரம் ரூ.500 மாமூல் கேட்டுத் தொந்தரவு செய்த குட்டி ரவுடியைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ரூ.500 கேட்டு கொலை மிரட்டல்
மறைமலைநகர் அருகே காயலாங்கடை நடத்தி வருபவர் இயன்பழம் (38) இவரது கடைக்கு வந்த மறைமலைநகர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த லிங்கன் (28) என்ற நபர் வாரம் 500 ரூபாய் மாமூல் தர வேண்டும் இல்லையென்றால் உன்னைக் கொலை செய்து விடுவேன் எனப் பகிரங்கமாக மிரட்டியதாகக் கூறப்படுகிறது. உயிருக்குப் பயந்த இயன்பழம் முதற்கட்டமாக 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
குட்டி பகவதியை தட்டித் தூக்கிய போலீசார்
பணம் கொடுத்த பிறகும், லிங்கன் அடிக்கடி கடைக்கு வந்து மாமூல் கேட்டுத் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளான். இதனால் மனமுடைந்த இயன்பழம், மறைமலைநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார் காந்திநகர் பகுதியைச் சேர்ந்த லிங்கனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட லிங்கன் மீது ஏற்கனவே பல திடுக்கிடும் வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழிப்பறி மற்றும் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தான்தான் பெரிய டான்...
தான்தான் பெரிய டான் என மனப்பால் குடித்து வந்த லிங்கனின் கனவு இப்போது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் கலைந்து போயுள்ளது வழிப்பறி மற்றும் சில்லறைத் திருட்டுகளில் ஈடுபட்டு வந்தவன் தன்னை ஒரு பெரிய தாதாவாகக் காட்டிக்கொள்ள அப்பாவி வியாபாரிகளை மிரட்டி மாமூல் கேட்டு வந்துள்ளான். இவனது தாதா வேஷத்தைக் கலைத்த மறைமலைநகர் போலீசார் இவனைச் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved