Also Watch
Read this
Posted on: Mar 25, 2026 03:39 PM
By: Manigandan Raja

வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை :
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த நடுவக்குறிச்சி அருகே உள்ள உடையார்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 45). இவர் ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநில துணை தலைவராகவும், நெல்லை மாவட்ட தலைவராகவும் இருந்து வருகிறார்.
தற்போது முன்னீர்பள்ளம் ஊராட்சியில் செயலாளராக பணியாற்றி வருகிறார்.. இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட ரெட்டியார்பட்டி ஊராட்சியில் செயலாளராக பணியாற்றியபோது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் எழுந்தது.
இது தொடர்பாக அவரை வேறு பஞ்சாயத்துக்கு அப்போதைய மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் வேறு ஊராட்சிக்கு பணியிட மாற்றம் செய்தார். இதனை எதிர்த்து முத்துக்குட்டி உயர் நீதி மன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த நிலையில் முத்துக்குட்டி மீது சென்னை ஊழல் தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு ஆட்சியர் கார்த்திகேயன் புகார் மனு அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சென்னை ஊழல் தடுப்பு போலீசார் இந்த புகார் தொடர்பாக விசாரிக்க தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தியதில் முத்துக்குட்டி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தது தெரியவந்தது.
இதையடுத்து முத்துக்குட்டி மற்றும் அவரது மனைவி மீது தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப் பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை பாளையங்கோட்டை டார்லிங் நகர் பகுதியில் உள்ள முத்துக்குட்டி யின் பிரமாண்ட வீட்டில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை DSP பீட்டர் பால்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் அனிதா மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
காலை தொடங்கிய இந்த சோதனை பிற்பகலை நீடித்தது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved