Also Watch
Read this
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமது சொந்த தொகுதியான எடப்பாடியில் பரப்புரை மேற்கொண்டபோது கண்கலங்கி பேசியது, அங்கு கூடியிருந்த அதிமுகவினரின் மனதை உருக வைத்துள்ளது. இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு மக்கள் தான் காரணம் என்றும், மீண்டும் மனித பிறவியாக பிறந்தால் உங்களின் குடும்பத்தில் ஒருவனாக பிறக்க வேண்டும் எனவும் கண்கலங்கியபடி கூறினார்.

எடப்பாடி தொகுதியில் இபிஎஸ் பிரச்சாரம்
எடப்பாடி சட்டப்பேரவை தொகுதியில், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியதாவது;
நான் இந்த நிலைக்கு உயர்ந்ததற்கு காரணம் இங்கிருக்கும் மக்கள் தான். நீங்கள் கொடுத்த பதவி. நான் உங்கள் வீட்டில் ஒருவனாக இருக்கின்றேன். மீண்டும் நான் மனித பிறவியாக பிறந்தால் உங்களின் குடும்பத்தில் ஒருவனாக பிறக்க வேண்டும். இவ்வளவு பெரிய பதவியை யாரும் கொடுத்தது கிடையாது. ஒரு நாட்டின் முதல் அமைச்சர், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற 2 அடையாளத்தையும் கொடுத்தவர்கள் யாரென்றால் இங்கு குழுமியிருக்கிற நம்முடைய பெரியவர்கள், தாய்மார்கள், இளைஞர்கள். அத்தனை மக்களையும் பாதம் தொட்டு பணிந்து வணங்குகிறேன்.

மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள்
ஒரு மனிதன் பிறக்கிறான், வாழ்கிறான், இறக்கிறான். ஆனால் இடைப்பட்ட காலத்தில் மக்களுக்கு சேவை செய்வது தான் அனைத்து மக்கள் மனதிலேயே நிலைத்து இருக்கும். அப்படி எம்ஜிஆர் மண்ணில் பிறந்தார். வாழ்ந்தார், சாதனை படைத்தார், மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஜெயலலிதாவும் மண்ணில் பிறந்தார், வாழ்ந்தார். இடைப்பட்ட காலத்தில் சேவை செய்தார்கள். மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்றைய தினம் 2 தலைவர்களும் நம்மிடத்தில் இல்லை. 2 தலைவர்களுக்கும் நாம் தான் பிள்ளைகள். இன்று எத்தனையோ கட்சிகள் தமிழகத்தில் இருக்கின்றது. இந்தியாவிலும் இருக்கின்றது. ஆனால் மக்களுக்காக வாழ்ந்த தலைவர்கள் என்றால் நம்முடைய தலைவர்கள் தான்.
இவ்வாறு இபிஎஸ் பேசியதும், அங்கிருந்தவர்கள் ஆர்ப்பரித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved