Also Watch
Read this
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ கபில், யூடியூபரை அடிக்க கை ஓங்கி சர்ச்சையில் சிக்கிய நிலையில் யூடியூபரின் வீடு புகுந்து தாக்குதலையும் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அப்போது அவரது அட்டூழியத்தை வீடியோ எடுத்து மக்கள் அரங்கிற்கு கொண்டு வர நினைத்த செய்தியாளர்களையும் தாக்கி அடாவடி செய்திருக்கிறார்.

ஜனநாயகன் எப்படி இருக்கிறது?
யூடியூபரை வீடு புகுந்து தாக்கி அராஜகம் செய்ததோடு, வீடியோ எடுத்த ஜனநாயகத்தின் நான்காம் தூணையும் தாக்கியிருக்கிறார் தவெக எம்.எல்.ஏ.

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் தொகுதி தவெக எம்.எல்.ஏ மருத்துவர் கபில், ஜனநாயகன் திரைப்படத்தை கண்டுகளித்துவிட்டு மக்களோடு மக்களாக திரையரங்கை விட்டு வெளியேறியபோது, யூடியூபர் சிவா படம் எப்படி இருந்தது? என கேட்டு மைக்கை நீட்டி இருக்கிறார். பேச விருப்பம் இல்லாத எம்.எல்.ஏ. யூடியூபரை பார்த்து முறைத்ததோடு அடிக்கவும் கை ஓங்கியதை, அங்கிருந்து பிற தொலைக்காட்சி சேனல்களின் செய்தியாளர்கள் படம்பிடித்து ஒளிபரப்பும் செய்திருந்தனர்.

விளையாட்டாக...
இந்த வீடியோ தவெக தலைமை வரை சென்றதால், பதில் சொல்லும் நிலைக்கு எம்.எல்.ஏ. கபில் தள்ளப்பட்டு இருக்கிறார். இதனால் கடும் டென்ஷனில் இருந்த அவர், அந்த யூடியூபருக்கு ஆபாச வார்த்தைகளால் டோஸ் விட்டதோடு மட்டும் நிற்காமல் விளையாட்டாக செய்த காரியம் எனக்கூறி மறுப்பு வீடியோவை வெளியிட மிரட்டியதாக சொல்லப்படுகிறது. அந்த மிரட்டலுக்கு பயந்த யூடியூபர், தன்னை விளையாட்டாக தான் கபில் அடிக்க வந்தார் என்ற வீடியோவை வெளியிட்டார்.

எம்எல்ஏவுக்கு வந்த கோபம்
தேர்தல் சமயத்திலிருந்தே தவெக எம்.எல்.ஏ கபிலை, promotion செய்வதற்கான வீடியோவை வெளியிடும் பணியை அந்த யூடியூபர் செய்து வந்த நிலையில், கபில் மக்கள் பணி, கட்சி பணிக்கு செல்லும் இடங்களுக்கு சென்று வீடியோ எடுத்து வெளியிடுவார். அப்படி இருக்கையில் தான் ஜனநாயகன் படத்துக்கு சென்றவரிடம் பேட்டி கேட்டு இருக்கிறார் அந்த யூடியூபர். எம்.எல்.ஏ. கபில் செய்தியாளர் சந்திப்பையே பெரும்பாலும் தவிர்த்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தியேட்டர் வாசலில் யூடியூபர் மட்டும் இல்லாமல் பிற செய்தியாளர்களும் இருந்த நிலையில், பேட்டி கேட்டதால் எம்.எல்.ஏவுக்கு சுளீரென்று கோபம் வந்ததாக கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்திய எம்எல்ஏ
இதனிடையே, அந்த மறுப்பு வீடியோ டெலிட் செய்யப்பட்டு விட்டதாக கபிலின் நலம் விரும்பிகளில் யாரோ ஒருவர் பற்ற வைக்கவே, அது உண்மையா? பொய்யா? என்று பார்க்காமலேயே தனது சகோதரர் மற்றும் ஆதரவாளர்கள் 20 பேரை கூட்டி சென்று தாக்கியதாக சொல்லப்படுகிறது. வீடு புகுந்து தவெக எம்.எல்.ஏ தாக்குதல் நடத்துவதாக வந்த தகவலையடுத்து நியூஸ் தமிழ் செய்தியாளர் உட்பட பல நிறுவன செய்தியாளர்களும் அங்கு சென்றிருக்கின்றனர். செய்தியாளர்கள் வந்துவிட்டார்கள் என கொஞ்சம் கூட மனதில் அச்ச உணர்வே இன்றி தனது ஆதரவாளர்களை வைத்து எம்.எல்.ஏ கபில் தாக்கியதாக சொல்லப்படுகிறது.

முற்றுப்புள்ளி வைக்குமா?
இதுகுறித்து காவல்துறையும் நடவடிக்கை எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செய்தியாளர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். முதலமைச்சர் விஜயின் ஜனநாயகன் ரிலீஸ் நாளன்றே ஜனநாயகத்தின் நான்காம் தூணாக பார்க்கப்படும் பத்திரிகையாளர்களை தாக்கி போராட வைத்திருக்கிறார் இந்த தவெக எம்.எல்.ஏ கபில். கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் இவரது அடாவடிக்கு தலைமை முற்றுப்புள்ளி வைக்குமா?