Also Watch
Read this
"தொகுதிக்குள் கால் வைத்தால் உடம்பில் உயிர் இருக்காது, உள்ளாடையோடு உட்கார வைத்து அடிப்பேன்," என தவெக ஒன்றிய செயலாளரிடம் அமைச்சர் ஜெகதீஷ்வரி மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி அக்கட்சியினருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. பதவியேற்பதற்கு முன்பு பேசிய பழைய ஆடியோ தான் என சொல்லப்பட்டாலும், அமைச்சராவதற்கு முன்பே கொ* மிரட்டல் என்றால், தற்போது அமைச்சராக இருப்பதால் இனி எந்த மாதிரியான மிரட்டல்களை விடுப்பார் என்பதே எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக உள்ளது.

சர்ச்சைகளுக்கு சர்ச்சையை...
’அரசு விழாவில் தனது பெயரை முதலில் போடாமல் ஏன் அமைச்சர் கீர்த்தனாவின் பெயரை போட்டீர்கள்?’ என ஆட்சியரிடமே கேள்வி எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியிருந்த அமைச்சர் ஜெகதீஷ்வரி, ரவுடி ராக்கெட் ராஜா உடன் சேர்ந்து புகைப்படம் எடுத்தது மேலும் சர்ச்சையானது. தற்போது தவெக முன்னாள் நிர்வாகியை அமைச்சர் ஜெகதீஷ்வரி மிரட்டுவது போன்ற ஆடியோ ஒன்றும் வெளியாகி சர்ச்சைகளுக்கு சர்ச்சையை கூட்டி உள்ளது.

தவெக ஒன்றிய செயலாளர் இடைநீக்கம்
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வடமேற்கு தவெக ஒன்றிய செயலாளர் ராஜகுரு, கட்சி விதிகளை மீறியதாக தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை அமைச்சர் ஜெகதீஸ்வரி மிரட்டுவது போன்று ஒரு ஆடியோ வெளியாகி உள்ளது. அதில், தன் தொகுதிக்குள் சாத்தூர் தொகுதியை சேர்ந்த யாராக இருந்தாலும் கால் வைக்க முடியாது, அதையும்மீறி வைத்தால் உள்ளாடையோடு உட்கார வைத்து, அடித்து உதைப்பேன் என்றும், கொ* செய்வேன் என்றும் அமைச்சர் ஜெகதீஷ்வரி பேசுவது போன்று உள்ளது. குறிப்பாக லட்சுமணன் என்ற பெயரை குறிப்பிட்டுதான் ஆத்திரத்தில் சீறுவதுபோன்று உள்ளது.

மின்னல் வேகத்தில் பரவும் ஆடியோ
இந்த ஆடியோ ஒருபுறம் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருக்க அதன் பின்னணி தான் என்ன? லட்சுமணன் யார்? ராஜகுரு ஏன் நீக்கப்பட்டார்? என லோக்கலில் விசாரித்தபோது பல விஷயங்கள் தெரிய வந்துள்ளன. இதுமட்டுமல்லாது, ஜெகதீஷ்வரி பேசியதாக கூறப்படும் ஆடியோவும் அவர் அமைச்சராக பொறுப்பேற்பதற்கு முன்னால், அதாவது 2 மாதங்களுக்கு முன்பு பேசியது எனவும் கூறப்படுகிறது. எந்த ஆட்சி வந்தாலும் கட்சி விட்டு கட்சி தாவும் ராஜகுரு, அரசு டெண்டர்களை எடுத்து பணிகளை செய்து வந்துள்ளார். அந்த வகையில், 48 பணிகளுக்கான லிஸ்ட்டோடு அதிகாரிகளிடம் சென்ற அவர், ஒன்றியத்தில் உள்ள அனைத்து டெண்டர்களும் தனக்குதான் வேண்டும் என கோரிக்கை வைத்ததாக தெரிகிறது.

டாஸ்மாக் பார் டெண்டர்
இதுமட்டுமல்லாது, டாஸ்மாக் பார்களையும் குத்தகைக்கு எடுக்கும் நோக்கில், அதன் உரிமையாளர்கள் மற்றும் பார்கள் அமைந்திருக்கும் நில உரிமையாளர்களிடமும் டீல் பேசியதாக கூறப்படுகிறது. அதோடு, ராஜபாளையம் தென்கிழக்கு ஒன்றியச் செயலாளர் லட்சுமணனிடமும் டீலுக்கு சப்போர்ட் செய்யுமாறு கேட்டதாக தெரிகிறது. மேலிடத்தில் தன் பெயர் கெட்டுவிடும் என லட்சுமணன் மறுக்க, பார் உரிமையாளர்களும் இரவோடு இரவாக ராஜகுருவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டினர். ஆனால், தன்மீது அவதூறு பரப்புவதாக முந்திக்கொண்டு போலீஸ் ஸ்டேஷனில் ஒரு புகாரை கொடுத்து வைத்தார் ராஜகுரு.

கட்சிக்கு எதிரான நடவடிக்கை
டெண்டர்களை கைப்பற்ற பம்பரமாய் சுழன்று வந்த தகவல், அமைச்சர் ஜெகதீஷ்வரி காதுகளுக்கு செல்ல, ராஜகுருவையே தொடர்பு கொண்டாராம். அப்போது, அரசு அதிகாரிகளை தான் சந்திக்கவே செல்லவில்லை, லட்சுமணன் தான் சந்தித்து இனிப்பு வழங்கினார் என ராஜகுரு கூறியதாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து, லட்சுமணனை அழைத்து விசாரித்தபோது இனிப்பு கொடுத்தது டெண்டருருக்காக அல்ல, முதலமைச்சரின் பிறந்த நாளன்று வழங்கியதாகவும், டாஸ்மாக் பார் டெண்டருக்கு ஒத்துழைக்காததால் ராஜகுரு, லட்சுமணனை கோர்த்துவிட்டதும் தெரியவந்துள்ளது. இப்படி நடவடிக்கை அனைத்தும் கட்சிக்கு எதிராக இருந்ததால் கடந்த 21ஆம் தேதி தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்டார் ராஜகுரு.

மீண்டும் பொறுப்பு வழங்கினால்...
கட்சியிலிருந்து தூக்கப்பட்ட ஆத்திரத்திலும், வரவிருக்கும் யூனியன் சேர்மன் தேர்தலில் போட்டியிடும் ஆசை நிராசையான விரக்தியிலும் இருந்த அவர், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அமைச்சர் ஜெகதீஷ்வரி பேசியது போன்ற ஆடியோவை வெளியிட்டுள்ளார். இதனை தன் வாயாலேயே ஒப்புக்கொண்ட ராஜகுரு, தனக்கு மீண்டும் பொறுப்பு வழங்கினால் கட்சிக்கு களங்கம் விளைவிக்க மாட்டேன் எனவும் கூறி உள்ளார்.

எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
அமைச்சர் ஜெகதீஷ்வரி பேசியதுபோன்ற ஆடியோ பதவி ஏற்பதற்கு முன்பு என கூறப்பட்டாலும் அதற்கு முன்பே அதிகார தோரணையில் கொ* மிரட்டல் விடுத்தது சரியா? தற்போது பதவியில் இருக்கும் அவர் இதுபோன்று அடுத்தடுத்து மிரட்டல் விடுக்கமாட்டாரா? இதையெல்லாம் கட்சி மேலிடம் கவனிக்கிறதா? இல்லையா? என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.