Also Watch
Read this
By: Web Team

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் நலனுக்காக, 6 சிறப்புத் திட்டங்களை நிறைவேற்ற முடிவு எடுக்கப்பட்டதாக, அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
அவர் வெளியிட்ட 6 அறிவிப்புகளின் விவரம்:
1. தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை கையாளும் போது, நுரையீரல் மற்றும் தோல் சம்பந்தமான நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இத்தகைய நோய்களை கண்டறியவும், சிகிச்சை அளிக்கவும் தனித் திட்டம் ஒன்று நிறைவேற்றப்படும்.
2. தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது உயிரிழந்தால், தூய்மைப் பணியாளர் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது. அவர்களின் குடும்ப நலனையும், வாழ்வாதாரத்தையும் முழுமையாக உறுதி செய்யும் வகையில் இந்த நிதி உதவியுடன் கூடுதலாக 5 லட்சம் ரூபாய் இலவச காப்பீடு ஏற்படுத்தி தரப்படும். இதனால், தூய்மைப் பணியாளர் உயிரிழந்தால் அவர்களின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு கிடைக்கும்.
3. தூய்மைப் பணியாளர் குடும்பத்தினரின் சமூக, பொருளாதார நிலையை உயர்த்திட, அவர்கள் சுய தொழில் தொடங்கும் போது, அத்தொழில் திட்ட மதிப்பீட்டில் 35% தொகை அல்லது அதிகபட்சமாக 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்கப்படும். கடனை திருப்பிச் செலுத்த ஏதுவாக 6% வட்டி மானியமும் அளிக்கப்படும்.
4. தூய்மைப் பணியாளர் குழந்தைகளுக்காக புதிய உயர்கல்வி உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, வரும் 3 ஆண்டுகளில், தூய்மைப் பணியாளர் நல வாரிய உதவியோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டங்கள் மூலம் 30 ஆயிரம் குடியிருப்பு கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடு ஒதுக்கீட்டில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
6. நகர்ப்புற தூய்மைப் பணியாளர்களுக்கு இலவச காலை உணவு அந்தந்த நகராட்சிகளின் மூலம் வழங்கப்படும். இத்திட்டம், முதலில் சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு படிப்படியாக மற்ற நகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved