Also Watch
Read this
By: Fyrose Banu

மேட்டூர் அருகே கொளத்தூரில் வீட்டுமனை பட்டா கேட்டு சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் ஆதரவு தெரிவித்தார். கொளத்தூர், காந்திநகர் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி 35 ஆண்டுகளாக குடியிருந்து வருகின்றனர். இவர்கள் வீட்டு மனை பட்டா கேட்டு மாவட்ட ஆட்சித் தலைவர், சார் ஆட்சியர், தாசில்தார் உள்ளிட்ட அரசு அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் பட்டா வழங்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கண்டித்து காந்திநகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அப்பகுதியில் பந்தல் அமைத்து 3-வது நாளாக பட்டா வழங்கக்கோரி சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
நாதக சட்டமன்ற வேட்பாளர் ஆதரவு
இந்நிலையில் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை சந்தித்து நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யா வீரப்பன் ஆதரவு தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்க விட்டால், 2 நாட்களில் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved