Also Watch
Read this
By: Manigandan Raja
பள்ளி முடிந்ததும், தனது வீட்டுக்கு 9ஆம் வகுப்பு மாணவியை அழைத்து சென்ற 17 வயது சிறுவனும், அவனது நண்பர்களும் சேர்ந்து மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவம், புதுச்சேரியில் நடந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 19 வயது இளைஞன் மற்றும் 4 சிறுவர்களை கைது செய்த போலீசார், தப்பியோடிய மற்றொரு சிறுவனை தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் கடந்த சனிக்கிழமை, காலை வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டு சென்ற 9ஆம் வகுப்பு மாணவி மாலையில் வெகு நேரமான பின்னரும் வீட்டுக்கு வந்து சேரவில்லை. மகளை காணாமல் பதறியடித்துக்கொண்டு புறப்பட்ட பெற்றோர், அக்கம்பக்கத்தினர் மற்றும் பள்ளியில் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என அனைவரிடமும் விசாரித்தனர். அப்போது தான், பள்ளி முடிந்து மாணவி ஒரு பையனுடன் வெளியே சென்றது தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து மகளை தேடிக்கொண்டு பெற்றோர் அச்சிறுவனின் வீட்டுக்கே சென்ற நிலையில் அவர்களுக்கு தூக்கி வாரிப் போட்டது.
அச் சிறுவனின் வீட்டில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது. மகளை மீட்டு விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர வைக்கிறது. இதனிடையே மாணவியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணையை நடத்தினர். அதில், மாணவியும், 17 வயது சிறுவனும் காதலித்து வந்ததாக சொல்லப்படும் நிலையில், பள்ளி முடிந்ததும் மாணவியை சிறுவன் தனது வீட்டுக்கு அழைத்து சென்றதாக சொல்லப்படுகிறது. பெற்றோரும் வீட்டில் இல்லாத நிலையில் மேலும் சில நண்பர்களை கூட்டிக் கொண்டு அச்சிறுவன் வீட்டுக்கு சென்றிருக்கிறான்.
வீட்டில் வைத்து அச்சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது மற்றும் கஞ்சாவை அருந்தி கொண்டு தலைக்கேறிய போதையில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து 19 வயதான ஆகாஷ், மூன்று சிறார் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒரு சிறுவன் தப்பி ஓடினான். அவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம்பி சென்ற காதலியை நண்பர்களுடன் சேர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கிய பிஞ்சில் பழுத்த காதலனின் செயலை நினைத்தாலே அதிர வைக்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved