Also Watch
Read this
Posted on: Feb 10, 2026 10:09 AM
By: Manigandan Raja
சென்னை, கொடுங்கையூரில் கஞ்சா போதையில் புள்ளிங்கோ பாய்ஸ் இருவர் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில் ஓசியில் உணவு கேட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர். நள்ளிரவில் தலைக்கேறிய போதையில் எகிறி எகிறி கடை உரிமையாளரை தாக்கியவர்கள், விடிந்தும் விடிவதற்குள் கம்பி எண்ணுவது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
கஞ்சா போதையில் இளைஞர்கள்
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தால், போதைக்கு அடிமையாகும் இளைஞர்கள், மாணவர்கள் தங்கள் வாழ்க்கையை சீரழித்து கொள்வதோடு, குற்ற சம்பவங்களில் ஈடுபடுவதும் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை, கொடுங்கையூர் பகுதியில் உள்ள உணவகத்தில் கஞ்சா போதையில் இளைஞர்கள் இருவர் அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்சி அதிர வைக்கிறது.
ஓசியில் உணவு
கொடுங்கையூர், கவியரசு கண்ணதாசன் நகர் அருகே வெற்றி வேல் என்பவர் வெற்றி ஃபாஸ்ட் ஃபுட் என்ற உணவகத்தை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு வாடிக்கையாளர் பலர் சாப்பிடவும், பார்சல் வாங்கி செல்லவும் காத்திருந்தனர். அப்போது, கஞ்சா போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் ஓசியில் உணவு கேட்டதாகவும், அதற்கு கடையின் உரிமையாளர் வெற்றிவேல் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த இளைஞர்கள், காது கூசும் ஆபாச வார்த்தைகளை அள்ளி தெளித்ததோடு, பாத்திரங்களை தூக்கி கடை உரிமையாளர் மீது வீசி தாக்குதல் நடத்த தொடங்கினர்.
இருவரை கைது செய்து விசாரணை
அப்போது பக்கத்திலிருந்த பரோட்டா மாஸ்டர் தடுத்தபோதும், அடங்காமல் எகிறிய புள்ளிங்கோ பாய்ஸ், கடை உரிமையாளரை காலில் எட்டி உதைத்து சரமாரியாக தாக்கினர். இதில் ஒரு சில நிமிடங்கள் நிலை குலைந்துபோன உரிமையாளர் பின்னர் சுதாரித்துக்கொண்டு பதிலுக்கு தாக்க ஆரம்பித்த போது இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் உணவகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. தாக்குதலில் காயமடைந்த உரிமையாளர் அளித்த புகாரில் சென்னை கொடுங்கையூர் போலீசார் அதே பகுதியை சேர்ந்த நாராயணன் மற்றும் வசந்த் ஆகிய இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை
கொடுங்கையூர் பகுதியில் கஞ்சா போதை ஆசாமிகள் இதுபோன்று தொடர் அட்டகாசத்தில் ஈடுபடுவதாக கூறும் அப்பகுதி மக்கள் அவர்களை கைது செய்வதோடு, கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved