Also Watch
Read this
Posted on: Dec 10, 2025 10:53 AM
By: Web Team
கல்விக் கடவுள் சரஸ்வதி தேவியின் உருவத்தில் தனது தலையை பொருத்தி வடிவமைக்கப்பட்டுள்ள பிளவுஸ் அணிந்துகொண்டு அரசு விழா ஒன்றில் குன்றத்தூர் பெண் திமுக ஒன்றிய சேர்மன் கலந்து கொண்டது விமர்சனத்திற்கு வழி வகுத்துள்ளது. தனது பெயரில் சரஸ்வதி இருப்பதால் தன்னை கடவுள் சரஸ்வதி என திமுக ஒன்றிய சேர்மன் நினைத்துக் கொள்கிறாரா? தன்னை கடவுள் போல சித்தரிப்பது இந்து மத கடவுளை அவமதிக்கும் செயல் இல்லையா எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சில ஆயிரங்களை செலவு செய்து ஆரி வொர்க் பிளவுஸ் அணிவதை தான் தற்போது பல பெண்களும் தங்கள் ஃபேவரைட் லிஸ்டில் வைத்துள்ளனர். அதிலும், சில பெண்கள் மயில், கிளி, யானை, கோபுரம் என தனித்துவமான டிசைன்களை தேர்ந்தெடுத்து அதில் ஆரி வொர்க் செய்து பிளவுஸ் அணிந்து பலரையும் திரும்பி பார்க்க வைக்கின்றனர்.
சிலர் திருமணத்தின்போது மணமகளும், மணமகனும் கைகோர்த்து கொண்டிருப்பதுபோல புடவை முந்தானையில் எம்ராய்டரி அல்லது ஆரி வொர்க் செய்து வாழ்நாள் நினைவுச்சின்னமாக தங்கள் பீரோவில் வைத்துக் கொள்கின்றனர்.
இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொன்றை தனித்துவமாக தேர்ந்தெடுத்து ஆடையில் வித்தியாசத்தை காட்டும் நிலையில், ஒரு பெண் திமுக ஒன்றிய சேர்மன் தனது பிளவுஸில் கல்வி கடவுள் சரஸ்வதி தேவியின் உருவத்தை பொறித்து விமர்சனத்தை விலை கொடுத்து வாங்கி உள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட படப்பை பகுதியில் பள்ளி கல்வித்துறையின் புதிய அரசு கட்டிடங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், அமைச்சர் தா.மோ.அன்பரசன், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, காஞ்சிபுரம் மாவட்ட குழு தலைவர் படப்பை மனோகரன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இத்தனைபேர் கலந்து கொண்டாலும் குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன் தான் விழாவின் நாயகி என்று சொல்ல வேண்டும்.
எனதுயிரே அமுதே தமிழே என சரஸ்வதி மனோகரன் மேடையில் பாட்டு பாடியதோடு, மேடைக்குக்கீழ் அமர்ந்து மற்ற பாடல் ராகத்திற்கு ஏற்றபடி தலையையும் ஆட்டி ரசித்தார்.
அப்படி மேடையில் பாடும்போதும் சரி, ராகத்திற்கு ஏற்றவாறு தலையை ஆட்டியபோதும் சரி விழாவில் இருந்த அத்தனை கேமராக்களும் அவரையே முன்னும் பின்னும் சுற்றி சுற்றி படம் பிடித்தது. சரஸ்வதி மனோகரன் பாடிய பாடலும், அவர் மற்ற பாடல்களை ரசித்த விதமும்தான் கேமராக்களை ஆக்கிரமித்தது, அதனால்தான் அவர் விழா நாயகியாக இருந்தார் என சொல்லிவிட முடியாது..
மாறாக அவர் அணிந்திருந்த பிளவுஸ் தான் சரஸ்வதி மனோகரனை விழாவின் நாயகியாகவே மாற்றியது. தனது பெயரில் மட்டுமல்ல சரஸ்வதி, அறிவு மற்றும் கலைகளின் தெய்வமான சரஸ்வதி தேவி தனது ரவிக்கையிலும்தான் உள்ளார் என்பதுபோல் ஒன்றிய குழு தலைவருடைய பிளவுஸின் கைப்பகுதியிலும், முதுகு பகுதியிலும் கையில் வீணை ஏந்தி, தாமரையில் வீற்றிருக்கும் சரஸ்வதியின் உருவம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
அந்த சரஸ்வதி தேவியின் உருவம்கூட பெரிதாக யாரையும் கவனிக்க வைக்கவில்லை. ஆனால், அந்த உருவத்தில் இருந்த முகம்தான், அடேங்கப்பா யாரந்த காஸ்ட்யூம் டிசைனர்? தனி அறை புக் செய்து யோசித்திருப்பாரோ? டிசைன் குறித்த அகண்ட அறிவு நாடி நரம்பெல்லாம் ஊறிப்போன ஒருவரால்தான் இதனை வடிவமைத்திருக்க முடியும் என யோசிக்க வைத்தது. கடவுள் சரஸ்வதியின் முகத்திற்கு பதிலாக லோ பட்ஜெட் சரஸ்வதியான திமுக ஒன்றிய சேர்மன் சரஸ்வதி மனோகரனின் முகம் பொறிக்கப்பட்டிருந்தது.
இவரது பிளவுஸை பார்த்த பலரும் கடவுள் சரஸ்வதி தேவியின் முகத்திற்கு பதிலாக தனது முகத்தை சேர்மன் வடிவமைத்திருந்தது சரியா? தன்னை கடவுள்போல சித்தரிப்பது இந்து கடவுளை அவமதிக்கும் செயல் இல்லையா? என விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதுஒருபுறமிருந்தாலும், இதெல்லாம் ஒரு விஷயமா? நமக்கு பிளவுஸ் டிசைன் தான் முக்கியம் என்ற மனநிலையில் உள்ள ஆரி வொர்க் பிளவுஸ் பிரியையைகள், குஷ்பூ போன்று பிளவுஸ் தைக்க வேண்டும், உலக அழகி ஐஸ்வர்யா ராய் போன்று பிளவுஸ் தைக்க வேண்டும் என கவுண்டமணி காமெடி காட்சியில் கடை முன்பு குவிந்திருப்பதுபோன்று, திமுக ஒன்றிய சேர்மன் சரஸ்வதி எந்த கடையில் பிளவுஸ் டிசைன் செய்தார்?
அந்த கடையில்போய் நாமும் வித்தியாசமாக தைக்க வேண்டும் என அந்த கடை முன்பு குவிந்துள்ளார்களாம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved