Also Watch
Read this
Posted on: Jan 29, 2026 11:37 AM
By: Web Team
அதிமுகவில் மீண்டும் இணைய தான் தயாராக இருப்பதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தயாரா? எனக் கேட்டுச் சொல்லுமாறு கூறிய ஓபிஎஸ், தற்போதைய இரண்டாவது தர்ம யுத்தத்தை தொடங்கியதற்கு காரணமே மனோஜ் பாண்டியனும், வைத்தியலிங்கமும் தான் என்றும் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் ஆலோசனை
முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம், தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள ஓபிஎஸ் பண்ணை வீட்டில் நடந்த இக்கூட்டத்தில், தேனி மாவட்ட நகர, ஒன்றிய பேரூர் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் என பலர் பங்கேற்றனர்.
ஜனநாயகத்திற்கு ஆபத்து
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ் கூறியதாவது:
எந்த ஒரு முடிவும் ஏற்படாமல், வதந்தியை, செய்தியாக வெளியிடுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. ராமநாதபுரத்தில் நான் போட்டியிட முக்கிய காரணம், எங்கள் பக்கம் தொண்டர்கள் இருப்பார்களா? என்பதற்காகவே சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டேன். 12 நாட்கள் தான் எனது தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆறு ஓ.பன்னீர்செல்வத்தை, தேர்தலில் நிறுத்தினார்கள். அந்த சூழ்ச்சிகளை முறியடித்து அதிமுகவை மீட்பதற்காக சட்டப் போராட்டம் நடத்தி, கட்சியை மீட்பது தான் எங்கள் நோக்கம். தேர்தலில் தனிக் கட்சி துவங்குவது அல்லது தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் நாங்கள் முடிவு எடுக்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே தொடர்ந்து சட்டப் போராட்டமாக போராடி வருகிறேன். தேவை இல்லாத குழப்பங்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டாம்.
அதிமுக ஒருங்கிணைய வேண்டும்
எம்ஜிஆர், ஜெயலலிதா என இருவரை முதல்வராக ஆக்கியது இந்த தேனி மாவட்டம். கழகத்தை மீட்பதற்காகவே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைய வேண்டும் என்பதே நோக்கம்.
கடம்பூர் ராஜூ கூறியது...
கேள்வி; ஒன்றிணைய வேண்டும் என நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், கடம்பூர் ராஜூ நாங்கள் ஒன்றாக உள்ளோம், அவர் தான் தனியாக உள்ளார் எனக் கூறுகிறாரே?
ஓபிஎஸ்; தமிழக மக்கள் அனைவரும் அறிவார்கள். பொய்யை திரும்பத் திரும்ப சொன்னால் உன்மையாகிவிடாது என்பதை கடம்பூர் ராஜூக்கு நான் சொல்லிக் கொள்கிறேன்.
கேள்வி; என்டிஏ கூட்டணிக்கு நீங்கள் வருவதற்கு டிடிவி. தினகரன் ஆசைப்படுவதாக கூறியுள்ளாரே?
ஓபிஎஸ்; நட்பின் அடிப்படையில் அவர் கூறியுள்ளார். டிடிவி தினகரன் மற்றும் எனது அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி அதிமுக வெற்றி பெற வேண்டும் என கூறுகிறார்கள். அதைத்தான் நானும் கூறுகிறேன். டிடிவி தினகரன் நிணைத்தால் நாங்கள் இணைய வழிவகை செய்ய வேண்டும்.
இரண்டாவது தர்மயுத்தம் மனோஜ் பாண்டியன் மற்றும் வைத்திலிங்கம் ஆகியோரால் தான் ஏற்பட்டது. தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த இயக்கம் துவங்கவில்லை. கட்சியை மீட்பதற்காகவே துவக்கப்பட்டது. அதிமுகவில் இணைய நாங்கள் தயார். டிடிவி தினகரனும் எடப்பாடி பழனிசாமியும் தயாரா?
இவ்வாறு ஓபிஎஸ் பதிலளித்தார்.
கடும் உச்சத்திற்கு சென்ற ஆபரணத் தங்கம்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved