Also Watch
Read this
By: Fyrose Banu

மேலூரில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பந்தைய தூரத்தை 500கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர்கள் அச்சத்துடன் கடந்து வந்தனர்.
போக்குவரத்து நெரிசலில் நடத்தப்பட்ட மாரத்தான்
மேலூரில், மேலூர் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் இரண்டாம் ஆண்டு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நுழைவு கட்டணம் 200 ரூபாயுடன் தொடங்கிய இப்போட்டியில் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 500கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர்.

3 பிரிவாக நடத்தப்பட்ட மாரத்தான்
தொடர்ந்து, 12 வயதுக்கு குறைவானவர்கள், 12 வயதுக்கு மேற்பட்டவர்கள், மற்றும் ஆண்கள், பெண்கள் என 3 பிரிவாக போட்டி தொடங்கி நடைபெற்றது. மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்போட்டி சந்தைப்பேட்டை, பெரியகடை வீதி, செக்கடிபஜார், பேருந்து நிலையம் சாலை, அழகர்கோவில் சாலை, நகைக்கடை பஜார் வழியாக மீண்டும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது. 
உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை
போட்டி, மதுரை - திருச்சி செல்லும் முக்கிய சாலையில் நடைப்பெற்ற நிலையில், போக்குவரத்து மாற்றம் மற்றும் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் போட்டி நடைபெற்றதால், பேருந்து, லாரி, கார் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு மத்தியில் போட்டியில் பங்கேற்ற சிறுவர், சிறுமிகள் அச்சத்துடன் பந்தைய தூரத்தை கடந்து வந்தனர். குறிப்பாக, மேலூரில் அதிக போக்குவரத்து நெரிசல் மற்றும் குறுகலான சாலையாக உள்ள பெரியகடை வீதி, செக்கடி பஜார் போன்ற பகுதிகளில், கடும் வாகன நெருக்கடிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது, போட்டியில் பங்கேற்றவர்களுக்கும், மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு?
மாரத்தான் போட்டியில் ஆர்வமுடன் எங்களது குழந்தைகளை பங்கேற்க வைத்தோம், ஆனால் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் போட்டி தாமதமாக தொடங்கப்பட்டதால் கடும் வாகன நெருக்கடிகளுக்கு இடையே போட்டி நடைபெற்றது. மிகவும் அச்சத்தை ஏற்படுத்தியது. மேலும் போட்டியின் போது குறுக்கே வரும் வாகனங்களால் விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு, இதுபோன்ற போட்டிகள் நடைபெறும் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் காவல்துறையினர் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்க வேண்டும் என போட்டியில் பங்கேற்ற சிறுவர் மற்றும் சிறுமிகளின் பெற்றோர்கள் தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved