Also Watch
Read this
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச லட்டு பிரசாத திட்டத்தை தங்கள் சுயலாபத்திற்காக கட்டணத்தில் விற்பனை செய்து 3 கோடியே 40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர். பெயரளவிற்கு மட்டுமே இலவச லட்டுகளை விநியோகித்து கடந்த மூன்றே ஆண்டுகளில் ஜெட்வேகத்தில் கோடிகளை குவித்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில் கோவிலில் நடந்த மோசடி வெளியானது எப்படி?

பாவங்கள் நீங்கும், மோட்சம் கிட்டும்
இந்தியாவின் மிக முக்கியமான, பழமையான மற்றும் மிகப்பெரிய சிவாலயங்களில் ஒன்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில். இந்த கோவிலுக்குச் சென்று அங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி, சிவனை வழிபட்டால் பாவங்கள் நீங்கும், சகல ஐஸ்வர்யங்கள் மற்றும் மோட்சம் கிட்டும் என பக்தர்கள் நம்புகின்றனர். அதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிறமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இப்படி, வந்து செல்லும் பக்தர்களுக்கு கட்டணத்தின் அடிப்படையில் லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வந்தது.

இலவசம் அறிவித்தும் வசூல்
இந்நிலையில், 2023-24 நிதியாண்டுக்கான சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது ராமநாதசுவாமி கோவிலில் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அப்போதைய திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தின் மூலம் நாள்தோறும் பக்தர்களுக்கு இலவசமாக லட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவிலுக்குள் தனியாக 2 ஸ்டால்களில் கட்டண அடிப்படையில் லட்டு விற்பனை நடைபெற்று வந்துள்ளது. பிரசாதம் இலவசம் என அறிவிக்கப்பட்டபிறகும் கட்டணம் ஏன் வசூலிக்கப்படுகிறது என சந்தேகப்பட்ட பக்தர்கள் அந்த ஸ்டால்களில் இருந்த ஊழியர்களிடமே அதுகுறித்து கேட்டுள்ளனர்

லட்டு விற்பனை மோசடி
ஆனால், அதற்கு அவர்கள் முறையாக எந்த பதிலும் சொல்லவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே, பக்தர்கள் சிலர் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். ஆரம்பத்தில் ஒருசிலரே புகார் அளித்த நிலையில் அடுத்தடுத்த நாட்களில் புகார்கள் குவிந்தவண்ணம் இருந்தனர். இதையடுத்து கோவில் இணை ஆணையர் செல்லதுரை தலைமையிலான விசாரணை குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போதுதான், கடந்த 3 ஆண்டுகளாக சைலண்டாக நடந்த லட்டு மோசடியே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுதான் பஞ்சமூர்த்தியின் கணக்கு
கோவில் பிரசாத தயாரிப்பு, அதன் தரம், விநியோகம் மற்றும் அதற்கான கணக்கு வழக்குகளை நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள தலைமை அதிகாரியான பிரசாத பிரிவு பேஷ்கார் என அழைக்கப்படும் பஞ்சமூர்த்தி தான் இந்த மோசடியின் மிக முக்கிய நபரே. லட்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பத்து மடங்கு அதிகமாக வாங்கிய பஞ்சமூர்த்தி, அதில் அரைமடங்கு மூலப்பொருட்களை மட்டும் பயன்படுத்தி குறைந்த அளவிலான லட்டுகளை தயாரித்து அந்த லட்டுகளை பக்தர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளார். மீதமுள்ள ஒன்பதரை மடங்கு மூலப்பொருட்களை மூலம் லட்டுகளை தயாரித்த அவர் அதனை கோவிலுக்குள்ளேயே 2 ஸ்டால்கள் அமைத்து கட்டணம் பெற்றுக்கொண்டு கல்லா கட்டி உள்ளார். அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் கணக்கு காட்ட பெயரளவிற்கு இலவச லட்டு. தனிப்பட்ட முறையில் பணத்தை குவிக்க கட்டண லட்டு. இதுதான் பஞ்சமூர்த்தியின் கணக்கு.

ரூ.3.40 கோடி மோசடி
இலவச லட்டு பிரசாதம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டான 2023 முதல் 2026 பிப்ரவரி வரை 3 ஆண்டுகளில் மட்டும் ஒரு லட்டு 15 ரூபாய் வீதம் 22 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் கட்டணத்தில் வழங்கி, சுமார் 3 கோடியே 40 லட்சத்து 65 ரூபாய் மோசடி செய்துள்ளார் பஞ்சமூர்த்தி. இந்த மோசடியை தனி ஒரு ஆளாக இவர் மட்டுமே செய்துள்ளாரா என்றால் இல்லை. பஞ்சமூர்த்திக்கு உதவியாக இருந்து கிடைத்த லாபத்தை ஏன் விடுவானே என, சிலர் கைப்பற்றி உள்ளனர். மொத்தத்தில் பக்தர்கள் நலனுக்காக கொண்டு வரப்பட்ட இலவச பிரசாத லட்டு திட்டத்தை தங்களது சுயலாப திட்டத்திற்காக பயன்படுத்தி உள்ளனர் என்பது அம்பலமானது. இவர்கள் 6 பேரையும் பணியிடை நீக்கம் செய்த அதிகாரிகள் இந்த மோசடியை அறிந்தும் காட்டிக்கொடுக்காமல் இருந்த தற்காலிக பணியார்களையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளனர்.

நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்
எந்த திமுக ஆட்சியில் இலவச பிரசாத லட்டு திட்டம் கொண்டு வரப்பட்டதோ அதே ஆட்சியிலேயே அதில் நடந்த மோசடியும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்போதை ஆட்சியில் இந்த திட்டத்தில் மோசடி நடக்காதவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள பக்தர்கள், பல கோவில்களில் இதுபோன்று முறைகேடுகள் நடப்பதாகவும் அதனையும் கண்டுபிடித்து நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved