Also Watch
Read this
Posted on: Mar 16, 2026 10:24 AM
By: Manigandan Raja

விசாரிக்க கோரி நீதிமன்றத்தில் மனு :
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வி.விஷ்ணுபிரியா நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகர டி.எஸ்.பி யாக கடந்த 2015 ம் ஆண்டு பணிபுரிந்து வந்தார். அப்போது 2015 ம் ஆண்டு ஜூன் 23 ம் தேதி சேலம் மாவட்டம் ஓமலூர் பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டார்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக டி.எஸ்.பி விஷ்ணுபிரியா விசாரித்து வந்த நிலையில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் தலைமறைவாக இருந்தார் ( தற்போது கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ளார்).
திருச்செங்கோடு டி.எஸ்.பி யாக பணிபுரிந்து வந்த விஷ்ணுபிரியா கடந்த கடந்த 18.09.2015 ம் தேதி திருச்செங்கோட்டில் உள்ள அவரது இல்லத்தில் திடீரென தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கினை உள்ளூர் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் சிபிஐ க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தி முடித்து வைக்கப்பட்டன.
இந்த நிலையில் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவையின் நிறுவன தலைவர் யுவராஜ் தற்போது மனு ஒன்றை நாமக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் - 1 ல் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கு ஏற்கனவே முடித்து வைக்கப்பட்டுள்ளது. எனினும் வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்பதால் அப்போதைய நாமக்கல் எஸ்.பி எஸ்.ஆர். செந்தில்குமார், டி.எஸ்.பி ராஜு, திருச்செங்கோடு காவல் ஆய்வாளர் சக்கரபாணி ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என மனுவில் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து யுவராஜ் வழக்கறிஞர் கணேஷ்குமார் மற்றும் அவருடைய தாயார் கூறுகையில் டிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கினை மீண்டும் விசாரிக்க கோரி யுவராஜ் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளோம், மீண்டும் அந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சரி பார்த்து விசாரணை நடத்த வேண்டும் என தெரிவித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved