Also Watch
Read this
Posted on: Oct 08, 2025 07:18 AM
By: Web Team

காசாவில் நடக்கும் இரக்கமற்ற இனப்படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, மானுட உயிர்கள் பலியாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வர உள்ளதாகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
காசாவில், இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து, சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூ. சார்பில் நடந்த போராட்டத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஓராண்டில் காசாவின் பெரும் பகுதி அழிக்கப்பட்டுள்ளது. அங்கு, இஸ்ரேல் நடத்தும் இனப் படுகொலையை மனிதநேயம் உள்ள ஒவ்வொருவரும் கண்டிக்கின்றனர். இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுத்து இந்திய அரசு, தாக்குதலைத் தடுக்க வேண்டும்.
வரும் 14ஆம் தேதி, தமிழக சட்டசபை கூட்டத்தொடரில், இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்தும், போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு நடவடிக்கை கோரியும். தீர்மானம் கொண்டு வரப்படும்.
தமிழக மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் இந்த தீர்மானத்தை, அனைத்துக் கட்சிகள் ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன். காசாவில் தாக்குதல் கண்மூடித் தனமானது. பாலஸ்தீன மக்களுக்கு தமிழகம் மனப்பூர்வ ஆதரவு அளிக்கும்.
மனித உயிர்களை காக்க வேண்டியது நமது கடமை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவிகள் வழங்க வேண்டும்.
காசாவில் அமைதியை நிலை நாட்ட மத்திய அரசு முயற்சிக்க வேண்டும். இரக்கமற்ற படுகொலைகள் நிறுத்தப்பட வேண்டும். உணவுப் பொருட்களுக்கு காத்திருந்தவர்களை இஸ்ரேல் படையினர் சுட்டுக் கொன்றனர். இது என்னுடைய இதயத்தை நொறுக்கியது. இந்த அநீதியை கண்டிக்காமல் அமைதியாக நடந்து செல்ல யாருக்காவது மனம் வருமா?
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved