Also Watch
Read this
Posted on: Feb 01, 2026 09:16 AM
By: Manigandan Raja

பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த ஜனவரி 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் சிம்ம வாகனம், பூத வாகனம், அன்னம், ரிஷபம், யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.
விழாவின் 9ம் நாளான இன்று அம்மன் தெப்ப தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதையொட்டி உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கேடயத்தில் எழுந்தருளி ஊர்வலமாக
தெப்ப மண்டபத்திற்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றதை அடுத்து வாணவேடிக்கைகள் முழங்க அம்மன் தெப்பத்தேரில் எழுந்தருளினார். பின்னர் மூன்று முறை தெப்பத்தை வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனைத்தொடர்ந்து அம்மன் புறப்பாடு கண்டு கடைவீதி, தேரோடும் வீதி வழியாக கோவிலை சென்றடைந்தார்.
10-ம் நாளான நாளை காலை ( 01-02-26) அம்மன் கண்ணாடி பல்லக்கில் வழிநடை உபயம் கண்டருளி பின்னர் நொச்சியம் வழியாக ஸ்ரீரங்கம் வடகரை கொள்ளிடம் ஆற்றில் சென்றடைகிறார்.
அன்று மாலை தீர்த்தவாரி கண்டருளும் அம்மன் ஸ்ரீரங்கம் ரெங்கநாதரிடம் இருந்து சீர்பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவின் இறுதி நாளான 11-ம் நாளான 2ம் தேதி உற்சவ அம்மன் கொள்ளிடம் ஆற்றில் இருந்து புறப்பட்டு வழிநடை உபயம் மற்றும் மண்டகப்படி பூஜைகளை கண்டருளி மூலஸ்தானம் சென்றடைகிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் சார்பில் இணை ஆணையர் சூரிய நாராயணன் மேற்பார்வையில் கோயில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved