Also Watch
Read this
மதுரையை மணிப்பூர் மாநிலம் போல் மாற்ற வேண்டும் என்ற என்.டி.ஏ. கூட்டணியின் சதியை முறியடித்ததாக, மதுரை மக்களுக்கு இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் ஆரிய மாடலை கொண்டு வந்து, தமிழ்நாட்டின் DNAவை சிதைக்க NDA கூட்டணி முயற்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

அதோடு, பாஜக ஆளும் வட மாநிலங்களுக்கு அளிக்கும் நிதிப் பகிர்வை தமிழ்நாட்டிற்கும் வழங்கினால், மாநிலத்தின் கடன் தீர்ந்து விடும் என்ற முதலமைச்சர் ஸ்டாலின், பாஜக ஆளும் மாநிலங்களுக்கான நிதிப்பகிர்வை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? என்று, மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுக்கு சவால் விடுத்தார்.

மதுரையில் மு.க.ஸ்டாலின்
மதுரையில் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பேசியதாவது;
மதுரைக்கான வளர்ச்சியை முன்னெடுக்கும் மாடல் தான் திராவிட மாடல். ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்வைப்பது வளர்ச்சியை கெடுக்கும், மத நல்லிணக்கத்தை பாதிக்கும் ஆரிய மாடல். மதுரை மக்கள் புத்திசாலிகள். இங்கு கலவரத்தை தூண்ட நினைத்தவர்களின் சதியை சிறப்பாக முறியடித்தீர்.

அமைதி, வளர்ச்சியை முன்னிறுத்தும் தமிழ்நாட்டின் டிஎன்ஏவை மாற்ற நினைத்து சொந்த மண்ணுக்கும், சொந்த மக்களுக்கும் துரோகம் இழைக்கும் கூட்டணியாக என்டிஏ உள்ளது. இவர்கள் தான் டபுள் இன்ஜின் என்ற டப்பா இன்ஜின் அரசை தமிழ்நாட்டில் அமைக்க துடிக்கிறார்கள். நாட்டிலேயே அதிக திட்டங்களை தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசு தான் செயல்படுத்துகிறது.

பியூஷ் கோயலுக்கு சவால்
இது தெரிந்தும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எதுவும் தெரியாததுபோல் பேசி உள்ளார். தமிழ்நாட்டில் எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை. அரசின் பணம் எங்கு போகிறது? கடன் சுமை அதிகரித்து உள்ளது. தமிழ்நாடு திவாலாகப் போகிறது என எந்த புரிதலும் இல்லாமல் பேசியுள்ளார். தமிழக அரசின் பணம் மக்களுக்கு தான் போகிறது. நான் பியூஷ் கோயலுக்கு சவால் விடுகிறேன். தமிழ்நாடு மத்திய அரசுக்கு தரும் ரூ.1க்கு பதில் எவ்வளவு திரும்பக் கிடைக்கிறது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு எவ்வளவு வழங்கப்படுகிறது. இந்த ஒப்பீட்டை வெளிப்படையாக அறிவிக்க முடியுமா? சொன்னால் உங்கள் குட்டு உடைந்துவிடும். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு வழங்கும் அதே மாதிரியான வரிப் பகிர்வை தமிழ்நாட்டுக்கு வழங்கினால், தமிழ்நாட்டின் மொத்த கடனும் அடைந்து நிதி நெருக்கடியே இருக்காது.

பார்த்துக்கொண்டே இருங்கள்
எங்கள் பணத்தை வாங்கிக் கொண்டு, பணம் எங்கே என்று கேட்பது நியாயமா? தமிழ்நாட்டை பார்த்து திவாலாகப் போகிறது என்று பியூஷ் கோயல் கூறியுள்ளார். பார்த்துக் கொண்டே இருங்கள் என்டிஏ தான் திவாலாக போகிறது.
இவ்வாறு பேசி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.

மதுரையில் களம் காணும் வேட்பாளர்கள்
மதுரை மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக பொதுக்கூட்டம் திருமங்கலத்தில் நடைபெற்றது.
திமுக வேட்பாளர்கள்
பி.மூர்த்தி - மதுரை கிழக்கு
பழனிவேல் தியாகராஜன் - மதுரை மத்திய தொகுதி
கோ.தளபதி - வடக்கு
மணிமாறன் - திருமங்கலம்
ரகுபாலாஜி - மேற்கு
வெங்கடேசன் - சோழவந்தான்
கிருத்திகா தங்கப்பாண்டி - திருப்பரங்குன்றம்

மதிமுக வேட்பாளர் பூமிநாதன் - தெற்கு
காங்கிரஸ் வேட்பாளர்கள்
சரவணகுமார் - உசிலம்பட்டி
விஸ்வநாதன் - மேலூர்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved