Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 06:45 AM
கரூரில் விதியை மீறி இயங்கி வந்த குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்திக் குழுவை கொடூரமாக தாக்கிய திமுக எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகனுக்கு சொந்தமான நத்தம் குவாரியில், அழுகிய நிலையில், ஆண் சடலம் மீட்கப்பட்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மன நலம் பாதிக்கப்பட்டவர்
பத்து நாட்களாக மாயமானதாக தேடப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர், குவாரிக்குள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், குவாரி மீது அடுக்கடுக்கான புகார் கூறி, பொது மக்கள் முற்றுகையிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
எம்எல்ஏ மகன் குவாரி
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சரளைபட்டியில் உள்ள ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் உடல் மீட்கப்பட்டது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்துமாறு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர் வலியுறுத்தி உள்ளனர். நத்தம் அருகே சரளைப்பட்டியில், ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான கல் குவாரி உள்ளது. சரளைப்பட்டியைச் சேர்ந்த 25 வயதான கருப்பசாமி, தாய், தந்தை இல்லாமல் உறவினர் பராமரிப்பில் வசித்து வந்தார். இவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், குவாரி பகுதியில் சுற்றித் திரிந்து வந்துள்ளார். வாய்பேச முடியாத நிலையிலும் அடிக்கடி குவாரி பகுதிக்குச் சென்று வடமாநிலத் தொழிலாளர்களுடன் பழகி வந்துள்ளார்.
உரிய விசாரணை வேண்டும்
இந்த நிலையில், கருப்பசாமியை கடந்த 10 நாட்களாக காணவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. ஞாயிற்றுகிழமை அன்று, குவாரியில் சுமார் 10 அடி பள்ளத்தில் கருப்பசாமி உடல் அழுகிய நிலையில் கிடந்து உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கருப்பசாமியின் உறவினர்கள் குவாரியை முற்றுகையிட்டனர். இவர்களுடன் நாம் தமிழர் கட்சியினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் புறநகர் டி.எஸ்.பி. சங்கர் மற்றும் போலீஸார் கருப்பசாமியின் உடலைக் கைப்பற்றி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக நத்தம் போலீஸார் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, பிரேதப் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர். இதனிடையே இந்த உயிரிழப்பு குறித்து உரிய விசாரணை நடத்த அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved