Also Watch
Read this
Posted on: Mar 24, 2026 06:06 AM
திமுக, மார்க்சிஸ்ட் இடையே தொகுதி பங்கீட்டில் நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. திமுக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. கடந்த முறை போட்டியிட்ட 6 தொகுதிகளை, மார்க்சிஸ்ட் கட்சி கேட்டது. ஆனால், கூட்டணிக்கு புதிய கட்சிகள் வந்துள்ளதால், 5 தொகுதிகள் மட்டுமே வழங்க முடியும் என்று திமுக தெரிவித்தது. இதனால், இரு தரப்பிலும் இழுபறி நீடித்து வந்தது. இது தொடர்பாக, முதல்வர் மு.க.ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் குழுவினர் சந்தித்து பேசினர். முடிவு எட்டப்படாத சூழலில் நேற்றும் மார்க்சிஸ்ட் குழுவினர் ஸ்டாலினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போதும், 5 தொகுதிகள் மட்டும் ஒதுக்க முடியும் என்று, ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார்.
முடிவுக்கு வந்த இழுபறி
தொகுதிகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் 5 தொகுதிகளை ஏற்றுக் கொள்ள முடிவு செய்தனர். இதைத் தொடர்ந்து, நேற்று மார்ச் 23ஆம் தேதி இரவு, மார்க்சிஸ்ட் கட்சியினர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் வந்தனர். அப்போது, சட்டப்பேரவைத் தேர்தலில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. இதைத் தொடர்ந்து திமுக - மார்க்சிஸ்ட் இடையே நீடித்து வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.
திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு
கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி தொடங்கி, கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதில் காங்கிரசுக்கு 28, இந்திய கம்யூ. 5, மதிமுக 4, முஸ்லிம் லீக், மமகவுக்கு தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இதர கட்சிகளுடன் திமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, இதுவரை 48 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டு, 186 தொகுதிகளை வைத்துக் கொண்டு, இதர கட்சிகளுடன் திமுக தலைமை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. டி.ஆர்.பாலு தலைமையிலான, திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழு, கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
மார்ச்-18 இ.கம்யூ. ஐந்து தொகுதிகள்
நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக - இந்திய கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம், இறுதி ஆனது. திமுக கூட்டணியில் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. திமுக கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்டுக்கு இம்முறை 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கூட்டணியில் அதிக கட்சிகள் இடம் பெற்றுள்ளதை தாண்டி, பாஜகவை வீழ்த்துவது ஒன்றே இலக்கு என மாநில செயலாளர் வீரபாண்டியன் விளக்கம் தந்து உள்ளார்.
மதிமுகவுக்கு 4 தொகுதிகள்
கூட்டணியில் இருக்கும் வைகோ தலைமையிலான மதிமுகவுக்கு, கடந்த முறையை விட குறைந்த தொகுதிகளை ஒதுக்க திமுக முடிவு எடுத்தது. உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிட நிபந்தனை விதித்தது. இதுகுறித்து வைகோ தலைமையில் நடந்த மதிமுக அவசர உயர்நிலைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. பின்னர், அண்ணா அறிவாலயத்திற்கு வைகோ வந்து சேர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. திமுக கூட்டணியில், மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 3 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் தனிச் சின்னத்திலும் போட்டியிட உடன்பாடு ஏற்பட்டது. திமுக உடன் ஒப்பந்தம் ஏற்பட்டதில் மகிழ்ச்சி என, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு...
மார்ச் 13ஆம் தேதி, திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 2 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சென்னை அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இடையே ஒப்பந்தம் இறுதி ஆனது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் ஒப்பந்தம் கையெழுத்தானது
திமுக கூட்டணியில் இதுவரை...
* காங்கிரஸ் - 28 + ராஜ்யசபா 1 இடம்
* இ.கம்யூ. - 5 தொகுதிகள்
* மார்க்சிஸ்ட் - 5
* மதிமுக - 4
* இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 2
* மனித நேய மக்கள் கட்சி - 2
* கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 2
* தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்பட்ட நிலையில், தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை
* இதுவரை 48 தொகுதிகள்
* மீதம் இருப்பது 186 தொகுதிகள்
திமுக கூட்டணியில் இனிமேல்...
தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம் உள்பட கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது, பேச்சுவார்த்தை தொடர்கிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved