Also Watch
Read this
By: Web Team

தமிழ்நாட்டில் தெருப் பெயர்களில் உள்ள சாதிப்பெயர் நீக்கம் குறித்த அரசாணைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து, விசிக தலைவர் திருமாவளவன் நன்றி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.கஸ்டாலினை, விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்து பேசிய பிறகு கூறி இருப்பதாவது:
கடந்த காலங்களில் சில தலைவர்களின் பெயர்கள், சாதிப் பெயர்களுடன் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, அவர்கள் கொண்டிருந்த அடையாளத்தை பின்பற்றுவதால் சாதியை வளர்க்கிறோம் என்று ஆகாது.
கோவையில், புதியதாக கட்டப்பட்டுள்ள பாலத்திற்கு, ‘ஜி.டி பாலம்’ என்று பெயர் வைத்து புதிய தலைமுறையிடம் கொண்டு போய் சேர்த்தால் மகிழ்ச்சி தான். ஆனால், ‘ஜி.டி.நாயுடு பாலம்’ என்ற பெயரில் தான் அவரை அடையாளப்படுத்த முடியும் என்று அரசு ஒரு முடிவை எடுத்திருப்பதால், அது சாதியை வளர்ப்பதாக இருக்காது என நம்புகிறோம்.
இனி வரும் காலங்களில், எந்தப் பெயரும் சாதி அடிப்படையில் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை முடிவு. இன்னும் சில சாதிப் பெயர்களில் உள்ள “ன்” என்ற விகுதியை மாற்றி “ர்” விகுதியாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். பின்னர், சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணையை வெளியிட்டதற்காக முதல்வரிடம் நன்றி கூறினோம்.
நியமன தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
வட சென்னை பகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
காசா தொடர்பான தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வருவதை நாங்கள் வரவேற்கிறோம். ஒரு சில கோரிக்கைகள் குறித்து தான் முதல்வரிடம் இன்று பேசினோம். தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் குறித்து இனிவரும் நாட்களில் எங்கள் எம்எல்ஏக்கள், சட்டப்பேரவையில் குரல் கொடுப்பார்கள். தனியார் மயத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கிறோம்.
இவ்வாறு விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved