Also Watch
Read this
அரசு அதிகாரிகளை ஜோதிட அலுவலகத்துக்கு வரவழைத்து தவெக எம்.எல்.ஏ கனிமொழி நடத்திய ஆலோசனை கூட்டம் எதிர்க்கட்சிகளை மட்டுமல்ல சொந்த கட்சியினரே வசைபாடும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு பெண் பொது வாழ்க்கையில் சாதிப்பது பொறுக்காமல் தான் இதனை பூதாகரமாக்கியதாக கனிமொழி குற்றம் சாட்டி இருக்கிறார்.
மன்னர் பரம்பரையில்...
பதவியேற்பு விழாவின் போது, நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல என முதலமைச்சர் விஜய் ஆக்ரோசமாக பேசியிருந்த நிலையில், அதனை கேள்விக்குறியாக்கும் வகையில் சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறார் தவெக எம்.எல்.ஏ கனிமொழி.

கனிமொழி எம்எல்ஏ
கோயம்புத்தூர் மாவட்டம், கவுண்டம்பாளையம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தவெகவை சேர்ந்த கனிமொழி பணியாற்றி வருகிறார். ஜோதிடரான இவரைப் பற்றி தேர்தலுக்கு முன்பே பல சர்ச்சைக்குரிய வீடியோக்களும் கருத்துகளும் வேகமாக பரவி பகீர் கிளப்பியிருந்தன. இதையெல்லாம் தாண்டி அவர் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். எம்.எல்.ஏவாக பதவியேற்றதும் தொகுதிக்கு திரும்பிய கனிமொழி, சக எம்.எல்.ஏக்களை போலவே தானும் ஆய்வுக்கு சென்று அதிரடி காட்டி அதனை ரீல்ஸ் ஆக இணையத்தில் பதிவேற்றி வந்தார்.
சமூகவலை தள புகைப்படம்
இந்நிலையில் தான், அதில் ஒரு பதிவு மட்டும் இணையவாசிகளின் கையில் சிக்கி கடும் விவாதத்தை கிளப்பியிருக்கிறது. கவுண்டம்பாளையம் சுகாதாரத்துறை அதிகாரிகளை சந்தித்து பொதுச் சுகாதார சேவைகளை மேம்படுத்துவது, தூய்மை பணிகளை தீவிரப்படுத்துவது உள்ளிட்டவைப் பற்றி விரிவாக கலந்துரையாடியதாகவும், மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியதாகவும் கனிமொழி தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார்.

பிளாஸ்டிக் சேரில் அதிகாரிகள்
வழக்கமாக, அரசு அலுவல் சார்ந்த எந்த விஷயமாக இருந்தாலும், அவை அரசு அலுவலகங்களில் வைத்து தான் பேசப்படும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏவும் அதிகாரிகளை தனது சட்டமன்ற அலுவலகத்திற்கு வரவைத்தோ அல்லது அரசுத்துறை அலுவலகத்திற்கு நேரில் சென்றோ தான் ஆலோசனை நடத்த வேண்டும். ஆனால், எம்.எல்.ஏவான கனிமொழியோ, அதிகாரிகளை ஜோதிட அலுவலகத்திற்கு வரவழைத்து ஆலோசனை நடத்தியது மட்டுமின்றி, ஏதோ இளவரசி போல அவர் மட்டும் விலையுயர்ந்த சொகுசு சோஃபாவில் அமர்ந்து கொண்டும், அதிகாரிகளை பிளாஸ்டிக் சேரில் அமரவைத்திருந்ததும் இணையத்தில் பெரும் பேசு பொருளானது. இந்த விவகாரம், எதிர்க்கட்சிகளை விட சொந்த கட்சியினரையே கனிமொழியை வசைபாடும் நிலைக்கு ஆளாக்கியது.
சொந்த கட்சியினரே வசை பாட...
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு எம்.எல்.ஏ. முறைப்படி கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொண்டிருக்க வேண்டுமே தவிர, இப்படி பண்ணையார்த் தனமாக அதிகாரிகளை வீட்டுக்கு வரச்சொல்லி ஆணவத்தோடு நடந்துகொண்டு முதலமைச்சர் பெயரை கெடுக்க கூடாது என்று தவெகவினர் பொருமித் தள்ளினர். சொந்த கட்சியினரே வசைபாட துவங்கி விட்டதால் வேறு வழியே இன்றி தன்னிலை விளக்கம் சொல்லும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டார் கனிமொழி.

வீடியோ வெளியிட்ட கனிமொழி
சர்ச்சைக்குள்ளான சோஃபா இருந்த இடத்திலேயே பேசி அவர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், தற்போது எம்.எல்.ஏ அலுவலகத்தில் பெயிண்டிங் மற்றும் சில பராமரிப்பு வேலைகள் நடந்து வருவதாகவும், அதனால் தான், அவசரமாக வந்த அதிகாரிகளை சந்திக்க வேறு வழியில்லாமல் தனது சொந்த ஜோதிட அலுவலகத்திற்கு வரவழைத்ததாகவும் கூறியிருக்கிறார். அதோடு, அந்த சோஃபாவை தாம் இப்போது வாங்கவில்லை என்றும், தனக்கும் அரசியல் நாகரிகம் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பொது வாழ்க்கையில்...
ஒரு பெண் சமுதாயத்தில் வெளியே வந்து, பொது வாழ்க்கையில் சாதிப்பது சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் தான் இதனை திட்டமிட்டு பெரிதாக்குவதாகவும் தனது வேதனையை பகிர்ந்திருக்கிறார். எதுஎப்படியோ, தன்னை எம்.எல்.ஏ. ஆக தேர்ந்தெடுத்த மக்களுக்கு சேவை செய்வது மட்டுமே ஒரு சட்டமன்ற உறுப்பினரின் தலையாய பணி என்பதையும், இப்படி சுய தம்பட்டத்திற்காக ஆர்வக்கோளாறில் செயல்படுவது தவறு என்பதையும் சம்மந்தப்பட்ட எம்.எல்.ஏ புரிந்துகொண்டால் சரி.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved