Also Watch
Read this
புதுக்கோட்டையில், வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி பெண்ணை, காரில் வலுக்கட்டாயமாக கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய சம்பவத்தில், தலைமறைவாக இருந்தவனை திண்டுக்கலில் வைத்து போலீஸ் கைது செய்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு படுக்கை வசதி கூட கொடுக்காமல் அலட்சியப்படுத்தியதாக அரசு மகப்பேறு மருத்துவமனை மீது பகீர் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொடூரன்கள் கையில் சிக்கிய மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு நடந்தது என்ன?
பின்னணி என்ன?
மாற்றுத்திறனாளி பெண்...
வாய் பேசாத, காது கேளாத பெண் என்ற இரக்கம் கூட இல்லாமல் காரில் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூரத்தை பார்த்து என்னவென்று சொல்வது?
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே வாய் பேச முடியாத காது கேளாத 35 வயதான மாற்றுத் திறனாளி பெண் ஒருவர், அரிசி ஆலையில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல வேலை முடிந்து அரிசி ஆலையில் இருந்து புறப்பட்டு அந்த பெண் சென்று கொண்டிருந்த போது, காரில் வந்த இரண்டு பேர் வழிமறித்ததாக கூறப்படுகிறது.

முந்திரி காட்டுக்குள்...
காரில் வந்து வழி மறித்த இருவரும் அந்த பெண்ணுடன் அரசி ஆலையில் வேலை செய்தவர்கள் என சொல்லப்படும் நிலையில், பெண்ணை வீட்டில் இறக்கி விடுவதாக கூறி காரில் ஏற சொல்லி வற்புறுத்தி உள்ளனர். இருவரும் போதையில் இருந்ததால் அந்த பெண் காரில் ஏற மறுத்து விட்ட நிலையில், கட்டாயப்படுத்தி ஏற்றியதாக சொல்லப்படுகிறது. காரில் ஏறியதும் பெண்ணின் வீடு அமைந்திருக்கும் வழியில் செல்லாமல் வேறு வழியில் செல்லவே, அந்த பெண் சைகையில் கேள்வி எழுப்பி இருக்கிறார். இதனையடுத்து, வாய் பேச முடியாத அந்த பெண் மீது தாக்குதல் நடத்திய இருவரும், வழியில் இருந்த முந்திரி காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, அங்கேயே விட்டு விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இந்த நிலையில், உடலில் காயங்களுடன் ரண வேதனையுடன் மெல்ல மெல்ல நடந்து சாலைக்கு வந்த பெண்ணை பார்த்த நபர் ஒருவர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வரவைத்து ஆலங்குடி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றிச் சென்றது மணக் கொள்ளை கிராமத்தை சேர்ந்த 55 வயதான மாரிமுத்து, 56 வயதான சேகர் என்பதும் தெரியவந்தது.

உரிய சிகிச்சை அளிக்கவில்லை
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணை, அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு மருத்துவர்கள் அனுப்பி வைத்த நிலையில், படுக்கை கூட கொடுக்காமல் உரிய சிகிச்சை அளிக்காமல் தரையிலேயே படுக்க வைத்திருந்த பகீர் வீடியோவும் வெளியாகியுள்ளது. முதலில் சிகிச்சை எதுவும் தேவையில்லை என மகப்பேறு மருத்துவமனையில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட அந்த பெண்ணுக்கு, வீட்டில் வைத்து திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு இருக்கிறது. அதற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பொது மக்கள் போராட்டம்
இதனிடையே, விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், பெண்ணை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய மாரிமுத்துவை கைது செய்தனர். மற்றொரு நபரான சேகர் தலைமறைவாக இருந்த நிலையில், உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி கறம்பக்குடி - புதுக்கோட்டை சாலையில் 50க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை
இதனையடுத்து, தனிப்படை அமைத்த போலீசார், திண்டுக்கலில் தலைமறைவாக இருந்த சேகரை கைது செய்தனர். இது ஒரு பக்கம் இருக்க, பாதிக்கப்பட்ட பெண்ணை கீழே படுக்க வைத்து சிகிச்சை அளித்த விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அலட்சியம் காட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved